Published : 29 Oct 2013 11:55 AM
Last Updated : 29 Oct 2013 11:55 AM

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி

வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார். பதவியேற்ற 15 நாளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கால் சதவீதம் வட்டி உயர்த்துவதாக அறிவித்தார்.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இது, மேலும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டு, 7.75 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

எம்எஸ்எப் என்கிற (marginal standing facility) அளவு 9 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எம்எஸ்எப் அளவை 0.75 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்தது. எம்எஸ்எப் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உள்ளதால், வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்துவதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை என்று டன் அண்ட் பிராண்ட்ஸ்டிரீட் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொருளாதார அறிஞர் அருண் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளின் கடன் வட்டி உயர்வால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x