Last Updated : 08 Mar, 2017 10:30 AM

 

Published : 08 Mar 2017 10:30 AM
Last Updated : 08 Mar 2017 10:30 AM

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7.1 சதவீதம் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் (2016-17) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீத அளவுக்கு இருக்கும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் கணித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு நிதி ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீத அளவுக்கு உயரும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், நடப்பு நிதி ஆண்டின் (2016-17) அக்டோபர் முதல் டிசம்பர் வரை யான மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7% அளவுக்கு உயர்ந்துள்ளது மிகவும் வியப்பான தாக தெரிவித்திருக்கிறது.

முந்தைய காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருந்ததையும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் காலாண்டில் 7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. மற்றும் சேவைத்துறையின் செயல்பாடும் மந்தமாக இருந்தது. ஆனால் நான்காம் காலாண்டில் தனியார் நுகர்வு மிக அதிகமாக இருக்கும். இதனால் சேவைத்துறை வளர்ச்சி கணிசமாக உயரும் என ஃபிட்ச் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

2016-17-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றும் இது 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் 7.7 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் பண மதிப்பு நீக்கம் காரணமாக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என கருதப்பட்டது. இருப்பினும் வளர்ச்சி அல்லது பாதகமான விளைவுகள் குறித்த விவரங்களை அரசு அளித்துள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்க முடியவில்லை என்றும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இதனால் வளர்ச்சி குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் குறையக்கூடும். இதனால் பின்னாளில் ஜிடிபி-யின் உண்மை வளர்ச்சி விவரத்தை திருத்தி வெளியிடக்கூடும் என்று ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது.

படிப்படியாக மேற்கொள்ளப் படும் சீர்திருத்த நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி உயரும்.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஃபிட்ச் நிறுவன கணிப்பு மற்றும் மத்திய புள்ளியியல் அமைப்பு (சிஎஸ்ஓ) மற்றும் சர்வதேச அறிவுசார் அமைப்பான ஓஇசிடி ஆகியன வெளியிட்டுள்ள வளர்ச்சி அளவும் ஒருமித்ததாக உள்ளது.

ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை தற்போது உள்ள அளவான 6.25 சதவீதத்திலிருந்து மாற்றாது என்றும் ஃபிட்ச் கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x