Published : 30 Jan 2014 08:10 AM
Last Updated : 30 Jan 2014 08:10 AM

ரூபாய் நோட்டு மாற்றம்: தங்கம் விலை உயர்கிறது- கருப்புப் பணத்தை தங்கமாக்கும் பதுக்கல்காரர்கள்

2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தால், தங்கம் விலை கணிசமாக உயரக்கூடும் என வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, ரூபாய் நோட்டுகளை மாற்றும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தலாமே தவிர, கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர முடியாது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் திட்டப்படி, 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் பிறகுதான் புதிய ரூபாய் நோட்டுகளை பெறமுடியும். இப்படி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்போது, அது வருமானவரித் துறையின் கண்காணிப்பில் வந்துவிடும். இப்படித்தான் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரலாம் என கணக்குப் போடுகிறது ரிசர்வ் வங்கி.

ஆனால், கில்லாடி கருப்புப் பண முதலைகள் வேறு மாதிரியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுகுறித்து ’தி இந்து-விடம் பேசிய வணிகம் சார்ந்த வல்லுநர்கள், ’’ரிசர்வ் வங்கி அறிவிப்பு வந்ததுமே கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அசுரகதியில் இயங்க ஆரம்பித்துவிட்டனர்.

வங்கிகளில் நேரடியாக பணத்தைக் கொண்டுபோய் மாற்றினால் சிக்கல் என்பதால், கள்ள மார்க்கெட்டில் தங்கத்தை வாங்கிப் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். முன்பெல்லாம் கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட்டில் இறக்குவார்கள். இப்போது அந்தத் தொழிலில் விதிகள் கடுமையாக்கப்பட்டுவிட்டதால் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தங்கம் இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய நிதியமைச்சகம். இதையடுத்து இந்தியாவுக்குள் வரும் கடத்தல் தங்கத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் தங்கமாக மாறி மறுபடியும் பெட்டிக்குள் உறங்கப் போகிறது.

அதேசமயம், கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் பதுக்க ஆரம்பிப்பதால் இயல்பாகவே தங்கத்தின் விலை எகிறிவிடும். இதன் மூலம் இந்தியாவுக்குள் வரும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரிக்கும்’’ என்று வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x