Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

வைப்பு நிதியில் எப்படி முதலீடு செய்வது?

சென்றவாரம் ஆர்.எஃப்.சி கணக்குகள் குறித்துப் பார்த்தோம். இவ்வாரத்திலும் இனி வரும் அடுத்த சில வாரங்களிலும், என்.ஆர்.ஐ/ பி.ஐ.ஓ – களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம். முதலீட்டு வாய்ப்புகளை இரு வகைகளாக பிரித்துக்கொள்வோம். ஒன்று ரிஸ்க் உடையவை; மற்றொன்று ரிஸ்க் இல்லாதவை. முதலில் ரிஸ்க் இல்லாத நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி கண்டறிவோம்.

இந்தியாவில் ஷெட்யூல்டு (SCHEDULED) வங்கிகள் எனக்கூறப்படும் கமர்ஷியல் வங்கிகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகளில் போடும் பணத்திற்கு, அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்தான் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்றாலும், நமது மத்திய ரிசர்வ் வங்கியின் நல்ல நடவடிக்கையால் இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு.

அவ்வாறு பிரச்சனை ஏதும் தென்பட்டால் மத்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, பிரச்சனை உள்ள வங்கியை மற்றொரு நல்ல வங்கியுடன் இணைத்துவிடும்.

இவ்வகையான ஷெட்யூல்டு வங்கிகள் அனைத்தும் என்.ஆர்.ஐ மற்றும் பி.ஐ.ஓ –களுக்கு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை (FIXED, CUMULATIVE DEPOSIT) வழங்குகின்றன. நாம் ஏற்கனவே கண்டது போல இந்த வைப்பு நிதி திட்டங்களில் மூன்று வகை உள்ளன.

1) என்.ஆர்.ஈ

2) என்.ஆர்.ஓ

3) எஃப்.சி.என்.ஆர் (பி).

என்.ஆர்.ஈ மற்றும் எஃப்.சி.என்.ஆர் (பி) கணக்குகள் மூலம் முதலீடு செய்யும் போது, வரும் வருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில் கிடையாது. ஆனால் வெளிநாட்டு இந்தியர்கள், தான் வாழும் நாட்டில் இந்த வருமானத்தை காண்பித்து வரி செலுத்த வேண்டுமென்றால், அவ்வாறு செய்து கொள்வது அவர்களின் கடமை ஆகும்.

என்.ஆர்.ஓ கணக்குகளின் மூலம் செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கு, இந்தியாவில் மூலத்தில் வரிப் பிடித்தம் உண்டு. உலக அளவில் உள்ள திடமான மற்றும் பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் பொழுது, வைப்பு நிதிகளுக்கு இந்தியாவில் தற்பொழுது வழங்கப்படும் வட்டி மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. ஒன்றிலிருந்து 10 ஆண்டுகள் வரைக்கும் உரித்தான என்.ஆர்.ஈ/ என்.ஆர்.ஓ டெபாஸிட்டுகளுக்கு, ஆண்டிற்கு 9% நல்ல பெரிய வங்கிகளில் கிடைக்கிறது.

இது ஒரு நல்ல வட்டி விகிதமாகும். ஆகவே என்.ஆர்.ஐ/ பி.ஐ.ஓ – க்கள் முதலீடு செய்வதில் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது, இது போன்ற வைப்பு நிதி திட்டங்களை நாட வேண்டும் என்பதில் எவ்விதம் சந்தேகமும் இல்லை.

சில வங்கிகளில் இதைவிட சற்று கூடுதலாகவும் வட்டி கிடைக்கிறது. உங்களின் வசதிக்கு ஏற்ப வங்கிகளைத் தேர்வு செய்து, முதலீடு செய்து கொள்ளுங்கள்.

சில வங்கி சாரா நிதி நிறுவனங்களும் (NBFC – NON BANKING FINANCIAL COMPANIES) என்.ஆர்.ஐ-களிடம் இருந்து என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றன. இவ்வகையான டெபாஸிட்டுகள் வங்கியை விட 1 – 2% அதிக வட்டியை தருகின்றன. இவ்வகையான முதலீடுகளில் தரமான நிறுவனங்களை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும். என்.ஆர்.ஓ டெபாஸிட்டுகளுக்கு மூலத்தில் வரிப் பிடித்தம் உண்டு.

இந்தியா பல நாடுகளுடன் வரி பிடிப்பதற்கான DTAA (DOUBLE TAXATION AVOIDANCE AGREEMENT) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான டிக்ளரேஷன் படிவம் உள்ளது. வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ என்.ஆர்.ஓ டெப்பாஸிட் செய்யும் பொழுது இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், மூலத்தில் வரி குறைவாகவே பிடிக்கப்படும். இந்தியா வெவ்வேறு நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு என்.ஆர்.ஓ டெபாசிட்டுகளுக்கு மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படும். பிற நாடுகளுக்கு உண்டான டி.டி.ஏ.ஏ வரியை இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.

பிரான்ஸ்10%

ஜெர்மனி 10%

சிங்கப்பூர் 15%

இங்கிலாந்து 15%

யூ.ஏ.இ. 12.5%

மலேசியா10%

அமெரிக்கா15%

ஜப்பான்10%

கனடா15%

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என்.ஆர்.ஐ-களிடம் இருந்து, என்.ஆர்.இ மற்றும் எஃப்.சி.என்.ஆர் (பி) டெப்பாஸிட்டுகளை பெறமுடியாது. அடுத்த வாரத்தில் என்.சி.டி (NCD – NON CONVERTIBLE DEBENTURE) மற்றும் வரியில்லா பாண்டுகளில் (Tax Free Bonds) வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வது குறித்துப் பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x