Last Updated : 01 Jan, 2014 11:59 AM

 

Published : 01 Jan 2014 11:59 AM
Last Updated : 01 Jan 2014 11:59 AM

ஆடம் ஸ்மித்தின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?

ஆடம் ஸ்மித் (1723-90) தன்னிச்சனையாக இயங்கும் சந்தை பொருளாதாரத்தில் பகுத்தறிவுடன் கூடிய சுயநலம் கொண்டு இயங்கும் தனிநபர்களால் பொருளாதார நன்மை ஏற்படும் என்று உணர்த்தியவர்.

ஒத்துணர்வும், சுயநலமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று நினைத்தவர் ஸ்மித். ஒவ்வொரு மனிதனும் மற்றவரின் துணையோடு தான் நடக்கின்றான், ஆனால் அந்தத் துணை எப்போதும் பச்சாதாபத்தில் கிடைப்பது என்று நினைக்கக்கூடாது, பல நேரங்களில் சுயநலத்தினால் கிடைக்கிறது.

கொடை என்பது ஒரு சிறப்பான செயல்தான், ஆனால் அது மட்டுமே வாழ்க்கையின் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்யாது. ஒவ்வொருவரும் தனக்கு எது அதிக லாபம் கொடுக்குமோ அதனை உற்பத்தி செய்ய முயல்கிறார், ஆனால் அவரின் உற்பத்தி நமக்குத் தேவையான பொருட்களை தருகின்றது.

ஒவ்வொரு உற்பத்தி காரணியும் அதிக லாபத்திற்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயலும். எனவே, அதிகபட்ச உற்பத்தித் திறனை பயன்படுத்தும் உற்பத்தியில் மட்டுமே ஒரு உற்பத்தி காரணி பயன்பாட்டில் இருக்கும். இது நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்த உதவும். இன்று வரை இருக்கும் அடிப்படை பொருளாதார கூறுகளில் இதுவும் ஒன்று.

வேலை பகுப்பு முறை, முழுமையான சாதகநிலை, அரசு தடையீடு இல்லாத சந்தை முறை, தடையில்லாத பன்னாட்டு வியாபாரம், என்ற பல பொருளியல் அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கியர் ஸ்மித்.

பொருளியல் அடிப்படையில் அரசியல் சிந்தனையையும் கூறியவர் ஸ்மித். இங்கிலாந்து தனது உற்பத்தியை வியாபாரம் செய்ய காலனி நாடுகளைக் கொண்ட பெரிய பேரரசை அமைத்து அதற்கு செலவு செய்து கிடைக்கும் லாபத்தை விட, வியாபாரத்தின் மூலம் பெறப்படும் லாபம் அதிகம், என்று கூறி காலனி ஆதிக்கம் வேண்டாம், தடையற்ற பன்னாட்டு வியாபாரம் வேண்டும், உள் நாட்டிலும் பொருளாதாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று ஸ்மித் கூறினார்.

அதே நேரத்தில் சாலை, குடிநீர், போன்ற அடிப்படை பொது வசதிகளை அரசு செய்யவில்லை என்றால் சந்தை சிறப்பாக செயல்பட முடியாது என்றும் ஸ்மித் கூறினார்.

சந்தை என்ற நிறுவன அமைப்பு எவ்வளவு சிறப்பாகச் செயல்படமுடியும் என்பதை நமக்கு முதலில் சிறப்பாக உணர்த்தியவர் ஸ்மித். அதே நேரத்தில் தனி மனித சுதந்திரம், அரசின் அடிப்படை செயல்பாடுகள் பற்றியும் புதிய விவாதங்களை துவக்கியவரும் ஆடம் ஸ்மித். பொருளியலை ஒரு தனி இயலாக நாம் இன்று பயில்வதற்கு அடிப்படை 1776-ல் அவர் வெளியிட்ட ‘An Inquiry into the Nature and Causes of Wealth of Nations’ என்ற புத்தகம். இன்றும் கடைகளில் (சென்னை உள்பட) தினம் விற்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இவரின் சிந்தனைகள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x