Published : 01 Mar 2016 12:59 PM
Last Updated : 01 Mar 2016 12:59 PM
நடுத்தர மக்களின் முக்கிய சேமிப்பு திட்டமாக இருக்கும் வருங்கால வைப்பு நிதியை எடுக்கும் போது அதற்கு 60% வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. பின்னர் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு கிடைக்கும் வட்டியில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என விளக்கமளிக்கப் பட்டது.
இந்த வரி விதிப்புக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தற்போது கூறியுள்ளது. பலரது கருத்துகளை கேட்டிருக்கும் நிதி அமைச்சர் இன்னும் சில நாட்களில் இதுகுறித்த முடிவை அறிவிப்பார் என்று நிதிஅமைச்சம் கூறியிருக்கிறது.
இப்போது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடு, வட்டி, வெளியே எடுக்கும் போது என மூன்று பிரிவுகளுக்கும் வரி விலக்கு பெறமுடியும். ஆனால் தற்போது வெளியே எடுக்கும் பணத்தில் 60 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, இந்த அறிவிப்பால் எழுந்த சந்தேகங்களுக்கு மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா நேற்று விளக்கம் கொடுத்தார்.
அவர் கூறியிருப்பதாவது. இதுவரை வருங்கால வைப்பு நிதியில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு மற்றும் வட்டிக்கு வரி ஏதும் செலுத்த தேவையில்லை. அதேபோல ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு செய்யப்படும் முதலீட்டை வெளியே எடுக்கும் போது வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் ஏப்ரல் 1, 2016-க்கு பிறகு கிடைக்கும் வட்டி தொகையை வெளியே எடுக்கும் போது அந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும் பிபிஎப் தொகைக்கு எந்த விதமான வரியும் விதிக்கப் படவில்லை. தற்போதைய நிலை தொடரும். பிபிஎப் தொகையை வெளியே எடுக்கும் போது 100 சதவீத வரி விலக்கு உண்டு. 3.7 கோடி பிஎப் கணக்குகள் உள்ளன. இதில் 70 லட்சம் நபர்கள் மட்டுமே 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே இந்த வரி. 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் பெரும் 3 கோடி நபர்களுக்கு இந்த வரி கிடையாது என்று ஹஷ்முக் ஆதியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT