Published : 14 Aug 2016 12:25 PM
Last Updated : 14 Aug 2016 12:25 PM
ரேடியம்ஒன் மற்றும் கிராவிட்டி4 ஆகிய நிறுவனங்களின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் அமெரிக்க இந்தியருமான குர்பாக்ஷ் சாஹலுக்கு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் ஒரு வருடம் தண்டனை வழங்கியுள்ளது. பெண்களை தாக்கிய வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் தொழில்முனை வோரான குர்பாக்ஷ் சாஹல் தனது 25 வயதிலேயே புளூலித்தியம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தை அப்போது 30 கோடி டாலருக்கு யாஹூ நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு ரேடியம் ஒன், கிராவிட்டி4 என பல்வேறு நிறுவனங்களை தொடங்கினார். சிலிகான்வேலியில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநரான இவர் ஓப்ரே வின்பரே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.
இன்டர்நெட் உலகில் மிகப் பெரிய ஜாம்பவனாக வலம் வரும் குர்பாக்ஷ் சாஹல் 2014-ம் ஆண்டு தனது குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணை தாக்கினார். இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டும் மற்றொரு பெண்ணை தாக்கினார். இதையெடுத்து அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த சான்பிரான்சிஸ்கோ உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டிரேசி பிரவுன், சாஹல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் சாஹல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை. மேலும் கடந்த மாதம் கிராவிட்டி4 மற்றும் ரேடியம்ஒன் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக் கிழமை மீண்டும் விசாரிக்கப்பட்டு தற்போது ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சாஹல் வழக்கறிஞர் இந்த தண்டனைக்கு தடை வாங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT