Published : 01 Feb 2017 07:25 PM
Last Updated : 01 Feb 2017 07:25 PM

ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு தடை

மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

கறுப்புப் பணத்தை மீட்க உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு மத்திய அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதில் பெருந்தொகை பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைப்படி ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் நீதிபதி ஷா கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு நல்ல முடிவு. பல்வேறு நாடுகளில் பெருந்தொகையிலான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி இந்தியாவிலும் தடை விதிக்க பரிந்துரைத்தோம். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதேபோல தனிநபர் ரூ.15 லட்சத்துக்கு மேல் ரொக்க பணம் வைத்திருக்கக்கூடாது என்றும் பரிந்துரை செய்திருந்தோம். அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x