Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM

கடன் பெற்றவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் - கோவை வங்கி ஊழியர்கள் கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை 2013 ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 829 கோடியாக உயர்ந்துள்ளதால், ஒரு கோடிக்கும் மேல் கடன் பெற்றவர்களின் பட்டியலை வெளியிட வேண்டுமென வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வி.ராஜன் கூறுகையில், வங்கித்துறை சந்தித்து வரும் பிரச்சினைகளில் வாராக் கடன்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இதை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு நிர்வாகங்கள் எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளின் லாபத்தின் பெரும்பகுதியை வாரக்கடன்களுக்கு ஒதுக்கீடாக வைக்க சொல்கின்றன. இதனால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ரூ.59,927 கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் தொகை, 2012 ஆம் ஆண்டில் ரூ. 1,17,262 கோடியாக அதிகரித்தது.

தற்போது 2013 ல் ரூ.1,82,829 கோடியாக இந்த தொகை உயர்ந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன்களில் வாராக் கடன்கள் சுமார் 11 சதவீதமாகும். இதில் ரூ.1 கோடிக்கும் மேல் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களின் 70 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜனும் வங்கிகள், வாராக்கடன்களை வசூல் செய்ய கடுமையான நடவடிக்கை வேண்டுமென வழிகாட்டுதல்களை வழங்கி யுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 95 சதவீதம் பெரும் கடன்களை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்ததால் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் செலவிடப்பட்ட தொகையைப் போல இருமடங்காகும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x