Last Updated : 30 Sep, 2014 04:59 PM

 

Published : 30 Sep 2014 04:59 PM
Last Updated : 30 Sep 2014 04:59 PM

வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை

கடன் மற்றும் நிதிக்கொள்கைகளை இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை வெளியான நிதிக்கொள்கையில் முக்கிய வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை.

2016-ம் ஆண்டு ஜனவரியில் பணவீக்கத்தை ஆறு சதவீதத் துக்குள் கொண்டு வருவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டிருப்பதால் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இதனால் ஏற்கெனவே இருக்கும் வட்டி விகிதங்களே தொடரும். ரெபோ விகிதம் 8 சதவீதம், ரிவர்ஸ் ரெபோ விகிதம் 7 சதவீதம் மற்றும் ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவீதம், எஸ்.எல்.ஆர். விகிதம் 22 சதவீதம் என்ற நிலையிலே தொடரும். மேலும் நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதம் என்ற நிலையிலே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் பணவீக்கத்தை பொறுத்து இது மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

வட்டி விகிதங்களில் எந்த விதமான மாற்றமும் இல்லாததால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கு செலுத்தும் தொகையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. தொடர்ந்து நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றங் களையும் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் வட்டி குறைப்பு இருக்கும்

ரிசர்வ் வங்கி சூழ்நிலையையும் தேவையையும் சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்று நிதிசேவைகள் பிரிவின் செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறை குறை வது, பணவீக்கம் குறைந்துக் கொண்டு வருவது ஒரு புறம் இருக்க தொழில் உற்பத்தி மந்தமாக இருக்கும் இந்த சூழலில் வாய்ப்பினை பயன்படுத்தி ரிச்ர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருக்கலாம் என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவது, முக்கிய பொருள்களின் விலை குறையும் சூழல் இருக்கும் நிலையில், பணவீக்கத்துக்கு எதிராக ரிசர்வ் வங்கி துணிச்சலான முடிவை எடுக்க விரும்பவில்லை. ஒரு வேளை வட்டி குறைப்பு இருந்திருந்தால் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார்.

விரைவில் சிறிய வங்கிகளுக்கான விதிமுறை

சிறிய மற்றும் பேமெண்ட் வங்கிகளுக்கான இறுதி விதிமுறை நவம்பர் மாதம் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் கடன் மற்றும் நிதிக்கொள்கையில் இந்த தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகளுக்கான வரைவு விதிமுறைகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதற்கான கருத்துகள் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் வந்தி ருக்கும் கருத்துகளை வைத்து இறுதி விதிமுறை நவம்பரில் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x