Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

வரி ஏய்ப்பை தடுக்க தகவல் பரிமாற்றம் அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

வரி ஏய்ப்பவர்களைத் தடுக்க அரசுத் துறைகளிடையே தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியது:

பொதுவாக வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வருவாய் புலனாய்வு அமைப்பு தருகிறது. இதற்குப் பதிலாக அரசுத் துறையில் உள்ள மற்ற துறைகள் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வு அமைப்புக்குத் தர வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும். வரி வசூலிக்கும் துறைகள் மற்றும் அமலாக்கல் துறை ஆகியனவும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பெருமளவிலான தகவல்கள் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம்தான் குவிந்துள்ளன. நிரந்தர கணக்கு அட்டை எண் (பான்) தகவல் தொகுப்பில்தான் பெருமளவிலான தகவல்கள் உள்ளன. இந்த தகவலின் அடிப்படையில்தான் உற்பத்தி வரி, சேவை வரி ஆகியன ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு விதிக்கப்படுகிறது.

இது தவிர, பெருமளவிலான தகவல்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்களின் தகவல் தொகுப்பில் உள்ளது. இந்தத் தகவல பகிர்ந்து கொள்ளப்படவில்லை எனில், வரி ஏய்ப்பாளர்களைக் கண்டுபிடிக்கும் அரசின் முயற்சி முற்றிலுமாக வீணாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு துறையும் மற்ற துறைகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து அறிந்து கொண்டு செயல் வேண்டும். அதேபோல ஒருவருக்கொருவர் எவ்விதம் பேசுவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்ப வசதி மூலம் எந்த ஒரு துறையும் வெகு சீக்கிரத்தில் மாற முடியும். இத்தகைய தொழில்நுட்பத்தை எவ்விதம் பயன்படுத்துவது என்பதற்காக உரிய நபரைத் தேர்வு செய்து அவருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச பலனை அடைய முடியும்.

மத்திய வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறையில் 532 அதிகாரிகள் உள்ளனர். விரைவிலேயே இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். பல்வேறு பணிகளுக்காக 18,067 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் உரிய காலத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

புலனாய்வு இயக்குநரகமானது வர்த்தகத்தை மேம்படுத்தும் அமைப்பாக செயல்படுகிறது. வர்த்தகத்துக்கு பாலமாக அமையும் இந்த அமைப்புதான் டபிள்யு.டி.ஓ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு நடத்த ஏற்ற அமைப்பாகும். கள்ளக்கடத்தல், கள்ள நோட்டு புழக்கம், போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் ஆகியன புலனாய்வு அமைப்பின் மற்றொரு பணியாகும்.

எந்த ஒரு பொருளும் சட்ட விரோதமாக, முறைகேடான வழியில் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்பட்டால் அது சட்ட விரோதமாகும். வர்த்தகத்துக்கு எதிரானதாகும். இத்தகைய முறைகேடான வழிமுறைகளை தடுப்பதும் முறையான ஏற்றுமதி, இறக்குமதியை ஊக்குவிப்பதைப் போன்றதே என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற நாடுகளிடையிலான வர்த்தகம் பெருமளவு விரிவடைய வேண்டும். வர்த்தகத்துக்கு எல்லை எதுவும் கிடையாது. இதன் மூலம்தான் உலக பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதைக் கருத்தில் கொண்டுதான் சமீபத்தில் முடிவடைந்த பாலி மாநாட்டில் டபிள்யு.டி.ஓ. ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது என்று சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x