Published : 27 Sep 2016 11:40 AM
Last Updated : 27 Sep 2016 11:40 AM
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் விரைவில் ரிசர்வ் வங்கியிடம் இணைப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளிக்க உள்ளன. இணைப்பு நடவடிக்கைக்கு துணை வங்கி களின் பங்குதாரர்கள் இசைவு தெரிவித்துள்ளதன் அடிப்படை யில் இந்த அறிக்கையை எஸ்பிஐயின் துணை வங்கிகள் அளிக்க உள்ளன.
வங்கி இணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்குதாரர்களின் ஆட்சேபனைகள் மற்றும் குறைகளைக் கேட்பதற்கு அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைகளை இயக்குநர்கள் குழு பரிசீலித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக குறைதீர்ப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கி நேற்று பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எந்த மாற்றங்களும் இல்லாமல் கையகப்படுத்த இந்த வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியின் வல்லுநர்கள் குழு இந்த இணைப்பு குறித்து அளித்துள்ள அறிக்கையை ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக விரைவில் அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக இதர துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் எஸ்பிஐ வங்கி அதன் ஐந்து துணை வங்கிகளை இணைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 36 சதவீதம் உயர்ந்து ரூ.30 லட்சம் கோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT