Published : 24 Apr 2014 12:10 PM
Last Updated : 24 Apr 2014 12:10 PM

தொழில் ஆரம்பிப்பது எப்படி?

இதுவரை தனிநபர் தொழில், பார்ட்னர்ஷிப் மற்றும் எல்.எல்.பி முறைகளில் தொழில் எவ்வாறு ஆரம்பிப்பது என்பது குறித்துப் பார்த்தோம். இப்போது பிரைவேட் லிமிடெட் மற்றும் பப்ளிக் லிமிடெட் முறையில் உங்கள் நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்துப் பார்ப்போம்.

பிரைவேட் லிமிடெட்

புரப்ரைட்டர் மற்றும் பார்ட்னர்ஷிப் தொழில் முறைகள் மிகவும் சுலபமானது என்ற போதிலும் நம்முடைய கடன் சுமைக்கு (Liability) கணக்கில்லை. உங்கள் தொழிலில் ஏற்படும் நியாயமான நஷ்டங்களுக்கு உங்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மீது கிளைம் (Claim) வரக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் பிரைவேட் லிமிடெட் கம்பெனி முறை மிகவும் சாதகமானது.

இவ்வகை தொழில் முறையில் உங்கள் லயபிலிட்டி நீங்கள் போட்ட பங்கு மூலதனத்தோடு முடிந்துவிடும். அதற்கு மேல் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இதனால்தான் இன்று இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான தொழில்கள் பிரைவேட் லிமிடெட் மற்றும் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புரப்ரைட்டர் மற்றும் பார்ட்னர்ஷிப் முறையில் நீங்கள் சிறிதாக ஆரம்பித்த தொழில் இன்று பெரிதாகி வளர்ந்து நிற்குமேயானால், அத்தொழிலை நீங்கள் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றிக்கொள்ளலாம். தொழில்கள் பெரிதாகும்பொழுது இவ்வகை தொழில் முறை மிகவும் சாதகமானதாக இருக்கும். சந்தையிலும் பிரைவேட் லிமிடெட் கம்பெனி எனும்போது அதற்கு ஒரு மதிப்பிருக்கும். பங்குதாரர்களும், வங்கிகளும், வாடிக்கையாளர்களும் மற்றும் சப்ளையர்களும் உங்களை சற்று மதிப்புடன் பார்ப்பார்கள். அதே போல் மூலதனம் திரட்டுவதற்கும் இவ்வகை தொழில் அமைப்பு சாதகமாக இருக்கும்.

இரண்டு பங்குதாரர்கள்

இவ்வகைத் தொழிலை ஆரம்பிப் பதற்கு குறைந்தது இரண்டு பங்குதாரர்கள் தேவை; மற்றும் இரண்டு டைரக்டர்கள் (Director) தேவை. இரண்டு பங்குதாரர்களே இரண்டு டைரக்டர்களாக இருந்து கொள்ளலாம். இவ்வகை நிறுவனங் களை ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்ச மூலதனம் ரூபாய் 1,00,000/- ஆகும். டைரக்டர்களுக்கு டின் நம்பர் (DIN - Director Identification Number) வாங்கிக் கொள்வது அவசியம். ஆர்.ஓ.சி (ROC - Registrar of Companies) மூலம் இவ்வகை நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் ஆர்.ஓ.சி-க்கு ஒவ்வொரு ஆண்டும் அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியம். மேலும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதும் கட்டாயமாகும். இவ்வகை நிறுவன கணக்குகளை ஆடிட்டர் தணிக்கை செய்வதும் அவசியம். புரப்ரைட்டர், பார்ட்னர்ஷிப் போன்ற நிறுவனங்கள் போல் அல்லாது இவ்வகை நிறுவனங்களைப் பராமரிப்பதற்கு செலவுகள் சற்று கூடுதல் ஆகும்.

நீடித்திருக்கும்

இவ்வகை நிறுவனங்கள் அதனின் பங்குதாரர்கள் இல்லாதபோதிலும் நீடித்துவாழும் தன்மையுடையது. பொதுவாக எனது லயபிலிட்டி ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும், அதே சமயத்தில் தொழில் எங்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அதைப்போல தங்களின் தொழில் ரகசியம் பிறருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிரைவேட் லிமிடெட் கம்பெனி அமைப்பு முறை மிகவும் கனக்கச்சிதமாகப் பொருந்தும்.

இவ்வகை அமைப்பில் பங்குகளை பங்குதாரர்கள் எளிதாக விற்கவோ வாங்கவோ முடியாது. அதைப்போலவே பொதுமக்களிடமிருந்து இவ்வகை நிறுவனங்கள் நிதி திரட்டக்கூடாது. இவ்வகை நிறுவனங்களின் பெயர் முடிவில் பிரைவேட் லிமிடெட் எனக் குறிப்பிட வேண்டும். உதாரணத்திற்கு “ABC Services Private Limited” என இருக்க வேண்டும்.

பப்ளிக் லிமிடெட்

லாப நோக்கில் ஆரம்பிக்கப்படும் நிறுவன அமைப்புகளில் மிகவும் பிரம்மாண்டமானது பப்ளிக் லிமிடெட் (Public Limited) அமைப்பாகும். இந்தியாவில் இருக்கும் பல பெரிய நிறுவனங்கள் இவ்வகை அமைப்பில்தான் உள்ளன. இவ்வகை அமைப்பில் உள்ள நிறுவனங்களின் பெயரின் முடிவில் பப்ளிக் லிமிடெட் (Public Limited) அல்லது லிமிடெட் என்ற சொல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு “ITC Ltd.”, “Maruti Suzuki India Ltd.” என இருக்கும்.

நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் பெரிய மூலதனத்துடன் இருந்து மிகவும் பெரிதாக வளரும் என நீங்கள் நினைத்தீர்களேயானால், பப்ளிக் லிமிடெட் அமைப்பில் துவங்குவது சிறந்தது. இவ்வகை அமைப்புகளில் பணம் திரட்டுவது சுலபம்.

இவ்வகை நிறுவனங்கள்தான் பங்குச்சந்தை மூலமாக நிதி திரட்ட முடியும். இவ்வகை நிறுவனங்களை ஆரம்பிக்க குறைந்த பட்ச பங்கு மூலதனம் ரூபாய் 5,00,000 ஆகும். சில சமயங்களில் நமது கட்டுப்பாட்டு வாரியங்கள் லைசென்ஸை கொடுப்பதற்கு முன், ஆரம்பிக்கப்படும் நிறுவனங்கள் பப்ளிக் லிமிடெட் முறையில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கின்றன. இவ்வகை நிறுவனங்களின் பங்குகளை எளிதாக பங்குச் சந்தை மூலமாகவோ (பட்டியலிடப்பட்டிருந்தால்) அல்லது இருவேறு நபர்களுக்குள்ளாகவோ எளிதாக வர்த்தகம் செய்து கொள்ளலாம். இவ்வகை நிறுவனங்களில் பெரிய கவர்ச்சி என்னவென்றால் பங்குதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவாக வேண்டு மானாலும் இருக்கலாம்.

நீங்கள் ஆரம்பிக்கப்போகும் நிறுவனத்தில் பல நூறு முதலீட்டா ளர்களை கொண்டுவர வேண்டுமானால், இவ்வகை நிறுவன அமைப்பினால் மட்டுமே முடியும். உங்களின் தேவையைப் பொறுத்து இவ்வகை அமைப்பில் நிறுவனத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் நீங்கள் தினந்தோறும் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x