Last Updated : 17 Jun, 2016 10:21 AM

 

Published : 17 Jun 2016 10:21 AM
Last Updated : 17 Jun 2016 10:21 AM

இங்கிலாந்து வெளியேறினால் நிதிச் சந்தையை பாதிக்கும்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கருத்து

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறினால் சர்வதேச நிதிச் சந்தையில் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். வரி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது ஜெயந்த் சின்ஹா இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது: சர்வதேச அளவில் பொருளா தாரத்தை பாதிக்கும் காரணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான விவகாரம், மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளை தொடர்ந்து இந்திய அரசு கண்காணித்து வருகிறது என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளை தொடர்ச்சியாக கருத்தில் எடுத்துக் கொண்டு அதுகுறித்து விவாதித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இங்கிலாந்து நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு வருகிற ஜூன் மாதம் 23-ம் தேதி நடக்க இருக்கிறது. இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால் சர்வதேச அளவில் விவாதத்தை உருவாக்கும். அதுமட்டுமல்லாது சர்வதேச நிதிச் சந்தையிலும் அந்நிய செலாவணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்துடனும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும் இந்தியா நல்லதொரு வர்த்தகத் தொடர்பை வைத்துள்ளது. மேலும் ஐரோப்பாவிலிருந்து அதிக முதலீடுகள் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ஒருவேளை இங்கிலாந்து வெளியேறுவதற்கு வாய்ப்பிருக் கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டப்போது, சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் மிக நெருக்கமாக வந்துள்ளன என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலையில்லாத் தன்மை கச்சா எண்ணெய் விலையை பாதிக்கின்றன. இறக்குமதியாளராக சமீபத்திய கச்சா எண்ணெய் விலை குறைவால் இந்தியா அதிக அளவு நன்மை அடைந்துள்ளது. ஆனால் திடீரென உயர ஆரம்பித்த கச்சா எண்ணெய் விலை கடந்த 11 மாதத்தில் அதிகபட்ச விலையாக பேரலுக்கு 50 டாலரை எட்டியது.

இந்தியா 80 சதவீத கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி மூலமாக பூர்த்தி செய்கிறது. இதற்காக இந்தியா 9,126 கோடி ரூபாயை செலவு செய்கிறது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்திலும் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

``பல கணிப்பாளர்கள் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 40 முதல் 60 டாலர் வரை என்ற நிலையிலேயே இருக்கும் என்று கூறுகின்றனர். அப்படி இருந்தால் நல்லது. அதற்கும் மேல் விலை உயர்ந்தால் மிகப் பெரிய கேள்வியாக இருக்கும்’’ என்று சின்ஹா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x