Published : 16 Jun 2016 09:37 AM
Last Updated : 16 Jun 2016 09:37 AM
எஸ்பிஐ வங்கி தன்னுடைய ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க அமைச்சரவை கொள்கை அளவிலான அனுமதியை வழங்கி உள்ளது. கடந்த மாதம் எஸ்பிஐ வங்கியின் இயக்குநர் குழு ஐந்து துணை வங்கிகளை இணைப்பது குறித்து தன்னுடைய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது.
முன்னதாக, கடந்த ஜூன் 6-ம் தேதி எஸ்பிஐ வங்கி இணைப்புக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
இந்த இணைப்பு மூலம் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிகை 50 கோடிக்கு மேல் இருக்கும். ரூ.37 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள நிறுவனமாக உயரும். 22,500 கிளைகள், 60,000 ஏடிஎம்கள் உள்ள பெரிய வங்கி யாக உயரும். எஸ்பிஐ வசம் மட்டுமே 16,500 கிளைகள் உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர் (எஸ்பிபிஜே), ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்பிடி), ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய துணை வங்கிகள் உள்ளன. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா ஆகிய வங்கிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத வங்கிகளாகும்.
மற்ற மூன்று வங்கிகளும் நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்கு 4 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்டிராவும், 2010-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் வங்கியும் எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்டன.
அனைத்து பணிகளும் சரியான வேகத்தில் நடக்கும்பட்சத்தில் 5 மாதங்களில் இந்த இணைப்பு பணிகள் முடிவடையும் என எஸ்பிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து வங்கி தொழிற் சங்கங்கள் வரும் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதி இந்த இணைப்பை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT