Published : 06 Sep 2018 04:54 PM
Last Updated : 06 Sep 2018 04:54 PM
இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று பிற்பகல் வர்த்தகத்தில் 72.12 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. ரூபாய் மதிப்பு சரிவுக்கு சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்சினைகளே காரணம் என அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.
இந்தநிலையில், இன்று பிற்பகல் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 37 காசுகள் சரிந்து, 72.12 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவும், இதுவரை இல்லாத ஒன்றாகும்.
இதனிடையே ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடைந்துள்ளது. மற்ற நாடுகளின் நாணயத்தை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு மோசமில்லை’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT