Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

தொடர்ந்து ஏறுமுகத்தில் பங்குச் சந்தை: 9 நாளில் 825 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை தொடர்ந்து 9-வது நாளாக ஏறுமுகத்தைக் கண்டது. புதன்கிழமை 125 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27139 புள்ளிகளாக உயர்ந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்ததே எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

தேசிய பங்குச் சந்தையில் 31 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8114 புள்ளிகளைத் தொட்டது. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் லாபம் ஈட்டின.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.45 சதவீதம் முதல் 3.40 சதவீதம் வரை உயர்ந்தன.

கடந்த 9 நாள் வர்த்தகத்தில் பங்குச் சந்தையில் மொத்தம் 825 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

பங்குச் சந்தை உயர்வுக்கு சர்வதேச நிலவரமும் முக்கியக் காரணமாகும். ரஷியா, உக்ரைன் இடையிலான பதற்றம் தணிந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது ஆகியனவும் காரணங்களாகும்.

பார்தி ஏர்டெல், கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ரூ. 672 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) அளவு குறைந்துள்ளது அந்நிய முதலீடுகள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். மேலும் பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

இன்ஃபோசிஸ் (3.41%), கோல் இந்தியா (3.40%), விப்ரோ (3%), பார்தி ஏர்டெல் (2.87%), டிசிஎஸ் (2.45%), லார்சன் அண்ட் டியூப்ரோ (1.36%), டாடா ஸ்டீல் (1.26%) அளவுக்கு ஏற்றம் பெற்றன.

மொத்தம் 1,529 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,494 நிறுவனப் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. 112 நிறுவனப் பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரூபாய் மதிப்பு உயர்வு:

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு புதன்கிழமை 19 காசு உயர்ந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 60.49 தர வேண்டிய நிலை உருவானது. கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு ஸ்திரமடைந்தது இதுவே முதல் முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x