Published : 15 Mar 2018 08:40 AM
Last Updated : 15 Mar 2018 08:40 AM

தொழிற்சாலைகளை நவீனமயமாக்க உதவும் புதிய தொழில் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டம்: வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு

மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ள தொழில் கொள்கை ஏற்கெனவே உள்ள தொழிலகங்களை நவீனமயமாக்க உதவும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோ பயன்பாடு உள்ளிட்டவற்றை புகுத்த இது வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புதிய தொழில் கொள்கையின் வரைவு அறிக்கை கருத்துக் கேட்புக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகள் நவீனமயமாகிவரும் வேளையில் ஏற்கெனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளின் கதி என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புதிய தொழில் கொள்கையின் முக்கிய நோக்கமே ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலைகளை நவீனமயமாக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்க விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: அடுத்தகட்ட தொழில்புரட்சிக்கு வித்திடும் வகையில் எத்தகைய மாற்றங்களைச் செய்யலாம் என்பதை தொழில்துறையினர்தான் குறிப்பிட வேண்டும். 4.0 எனப்படும் அடுத்த தலைமுறை தொழில்புரட்சியானது அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதுதான். ஐஓடி, ரோபோ, ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இதை சாத்தியமாக்கலாம்.

பொதுவாக இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வேலையிழப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் தாக்கம் இருந்தாலும் பிற துறைகளில் வேலை உருவாக்கம் நிச்சயம் இருக்கும். நவீன தொழில்நுட்பம் பல துறைகளில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x