Published : 19 Mar 2018 08:35 AM
Last Updated : 19 Mar 2018 08:35 AM
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இதனைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு நடவடிக்கையாக நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கும் அனைவரது பாஸ்போர்ட் தகவல்களைச் சேகரிக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.
நிறுவனங்களில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இயக்குநர் அடையாள எண் (டின்) கொடுக்கப்படும். ஒரு வேளை டின் எண் வைத்திருப்பவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை எனும் பட்சத்தில், தங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என உறுதியளிப்பு கடிதம் பெறவேண்டும் என்றும் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக டின் எண் பெற வேண்டும் எனும் பட்சத்தில் தங்களுடைய பாஸ்போர்ட் தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகள் இருப்பதாக தெரிகிறது. இதற்கு நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
பாஸ்போர்ட் குறித்த தகவல்கள் இருக்கும் பட்சத்தில் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடு செல்பவர்களை உடனடியாக தடுக்க முடியும். தற்போது அந்த தகவல் இல்லாததால் விசாரணை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்காக இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா உள்ளிட்டோர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி அதனைத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வங்கிகளில் ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருப்பவர்களின் பாஸ்போர்ட் தகவலைச் சேகரிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதேபோல 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு இந்த கடனைச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT