Published : 21 Mar 2018 08:51 AM
Last Updated : 21 Mar 2018 08:51 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு எதிரொலி: இந்தியாவின் வளர்ச்சி அளவைக் குறைத்தது கோல்டுமேன் சாக்ஸ்

2019-ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.6 சதவீதமாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. முன்னதாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019-ம் நிதியாண்டில் 8 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. இது தொடர்பாக முதலீட்டு வங்கியான கோல்மேன் சாக்ஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கூறியுள்ளதாவது,

சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.12,000 கோடி ஊழல் வெளிவந்ததையடுத்து வங்கித் துறையில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளின் இந்த நிதி மோசடியால் சிறு கடன்களில் பாதிப்பு உருவாகும் என்று இதர வங்கிகளும் குறிப்பிட்டுள்ளன. ஏற்கெனவே இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் உச்சத்தில் உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு சொத்துகள் வாராக்கடனால் முடங்கியுள்ளன. தவிர புதிய நிதி மோசடிகளாலும் கடன் வளர்ச்சி அதிகரிப்பதில் மிகப் பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் முன்னதாக 8 சதவீதமாக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கணிப்பு தற்போது 7.6 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான மூலதன முதலீட்டை மத்திய அரசு கடந்த ஆண்டில் அறிவித்தது. இதன் மூலம் வங்கிகள் கடன் வழங்குவதை தொடரும். இதனால் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளில் 3200 கோடி டாலர் முதலீடு மேற்கொள்வதாக அரசு அறிவித்தது. இந்த முதலீட்டை மேற்கொள்ளவில்லை எனில் மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்றும் கோல்டுமேன் சாக்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்திய பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் 15000 கோடி டாலராக உள்ளது. இதன் காரணமாக இந்திய வங்கித்துறை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கிகளின் இழப்புகள் அதிகரிக்கும்பட்சத்தில் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது நிதி மோசடி சட்டங்களில் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அழுத்தம் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களுக்கான குறிப்புகளில் , பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி மோசடிகளால் பொருளாதார வளர்ச்சியில் குழப்பம் உருவாகும். ஆனால் வங்கி மூலதன முதலீட்டின் சாதகமான சூழலால் கடன் வளர்ச்சி சாத்தியமாவதுடன் , முதலீடுகள் அதிகரிக்கவும், ஜிடிபி வளர்ச்சியிலும் சாதகமான நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்து காலாண்டுகளாக இல்லாத அளவில் கடந்த அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஜிடிபி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் கணித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் 8.3 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி மிக மோசமான செயல் என்றும் கோல்டுமேன் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

- ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x