தேவையற்ற இறக்குமதியை நிறுத்துங்கள்: வர்த்தக அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தல்

தேவையற்ற இறக்குமதியை நிறுத்துங்கள்: வர்த்தக அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

வெளிநாடுகளிலிருந்து தேவையற்ற இறக்குமதிகளை தடுத்து நிறுத்துமாறு வர்த்தக அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியத் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான திட்டமாகும். சுதந்திர தினஉரையில் இதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக பிரதமர் அலுவலகம் இத்தகைய சுற்றறிக்கையை வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. தேவையற்ற இறக்குமதிகளைத் தடுப்பதன் மூலம் உள்நாட்டு தொழில்களைக் காப்பதோடு சுயசார்புத் தன்மை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தேவையற்ற பொருட்கள் என 9 பொருட்களை வர்த்தக அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இவை ஆண்டுதோறும் தலா 10 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதியாகின்றன. இறக்குமதியாகும் பொருட் களில் 60 சதவீத அளவை சமையல் எண்ணெய் பிடித்துள்ளது. இதுதவிர பருப்பு வகைகள், பழங்கள், முந்திரி, சர்க்கரை, மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கோகோ பொருள்கள், எள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இத்தகைய பொருள் இறக்குமதியைக் குறைக்க சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த சங்கங்களுக்கு வர்த்தக அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்தப் பொருட்களின் இறக்குமதி அளவைக் குறைக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை கூறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் வித்துகளின் விலை சரிந்து வருவதால் உள்நாட்டிலும் அவற்றின் விலை குறைந்து வருகிறது. இருப்பினும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் உள்நாட்டில் உள்ள சங்கங்களோ சோயா விலை சரிந்து வருவதைத் தடுக்க இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இறக்குமதியாகும் சமையல் எண்ணெய் மீது 10 சதவீத வரியை மத்திய அரசு விதித்தது. ஆனால் இதுதொடர்பான சங்கங்களோ இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு 14.5 சதவீதம் வரி விதிக்கப்படுவதை சுட்டிக் காட்டி கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி வித்தியாசத்தை சுட்டிக் காட்டின.

5 சதவீத அளவுக்கு வரி வித்தியாசம் இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் அளவு அதிகரித்தது. இதனால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in