Published : 01 Feb 2019 12:17 PM
Last Updated : 01 Feb 2019 12:17 PM
வரும் மார்ச் மாதத்துக்குள் நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி செய்து தரப்படும் என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார்.
2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், " நாடுமுழுவதும் உள்ள வீடுகளுக்கு மின்வசதி அளிக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. ஏறக்குறைய 2.50 கோடி வீடுகளுக்கு மின்வசதி கிடைக்கவில்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மத்திய அரசு செயல்படுத்திவரும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்து தரப்படும். இதன்படி, 2019, மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 2.50 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்
சவுபாக்கியா திட்டத்தின் கீழ் இதுவரை, 2 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரத்து 168 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சவுபாக்கியா திட்டத்தில் இதற்காக ரூ.16 ஆயிரத்து 320 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதுவரை 2 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரத்து 762 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தானில் 8 ஆயிரத்து 460 வீடுகள், சத்தீஸ்கரில் 20 ஆயிரத்து 134 வீடுகளுக்கும் மின்வசதி இல்லை. இந்த வீடுகளுக்கு மின்வசதி வழங்கப்படும் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT