Published : 01 Feb 2019 05:27 PM
Last Updated : 01 Feb 2019 05:27 PM

கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையால் அரசுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வரி வருவாய்: பியூஷ் கோயல் பெருமிதம்

 

 

கருப்புப் பணத்துக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கையால் ரூ.1.3 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளதாக இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

 

பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ''கருப்புப் பணம், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் மீதான வரிவிதிப்புச் சட்டம் 2015, பொருளாதாரக் குற்றங்களைச் செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைத் தண்டிக்கும் சட்டம் 2018, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால், ரூ.50,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பினாமி சொத்துகள் ரூ.6,900 கோடியும் வெளிநாட்டு சொத்து ரூ.1,600 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

3,38,000 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களின் இயக்குநர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நிதியாண்டு 2017-18-ல் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.06 கோடியாக அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்துக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கையால் ரூ.1.3 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது'' என்றார் பியூஷ் கோயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x