Published : 22 Dec 2018 09:08 AM
Last Updated : 22 Dec 2018 09:08 AM

2015 உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் 5,813 குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடக்கம்: ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தகவல்

``சென்னையில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களில் 5,813 நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன” என்று தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா) சார்பில்,'மேட் இன் தூத்துக்குடி' என்ற பெயரில், மூன்று நாள் தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை தொடங்கி வைத்து, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் பேசியதாவது:

படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த தமிழக அரசால் உருவாக்கப்பட்ட நீட்ஸ் திட்டத்தின்கீழ், கடன் உச்சவரம்பு ரூ. 1 கோடி என்பது தற்போது ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்ச மானியத்தொகை ரூ. 25 லட்சத்தில் இருந்துரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்கள் தொடங்குவதற்கான பல்வேறு அனுமதிகளை இணையம் வழியாக எளிதாக பெறும் வகையில், ‘தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மற்றும் விதிகள்- 2018' உருவாக்கப்பட்டுள்ளது.  இத்தளம் மூலம் இன்றுவரை 285 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ரூ.632.62 கோடி முதலீட்டிலான 198 விண்ணப்பங்களுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் மூலம் ரூ.2,42,160 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதில்குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டும் ரூ.16,576 கோடிமுதலீட்டுக்கான 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், ரூ.7,273 கோடிமுதலீட்டுக்கான 5,813 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு, தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

2-வது உலக முதலீட்டாளர் மாநாடு வரும், ஜனவரி 23, 24 தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் புதிய முதலீடுகள் பெற ரூ. 20 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தாண்டி வரும் நாட்களில்  முதலீடு ரூ. 30 ஆயிரம் கோடியை எட்டிவிடும் என நம்புகிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x