Published : 01 Aug 2018 04:24 PM
Last Updated : 01 Aug 2018 04:24 PM
பணவீக்கம் காரணமாக, மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வர்த்தக வங்கிகள் வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது. இதுபோலவே வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ என அழைக்கப்படுகிறது.
பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ரெப்போ ரேட் 6.50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரெப்போ ரேட் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இது, 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பண வீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2வது அரையாண்டில் பணவீக்க விகிதம் 4.8 சதவீதமாகவும், 2019- 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்க விகிதம் 5.0 சதவீதமாகவும் உயர வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளதால் வர்த்தக வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடனுக்கான வட்டி விகிதங்களும் உயர வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT