Published : 23 May 2018 10:21 AM
Last Updated : 23 May 2018 10:21 AM
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக சென்னையில் பெட்ரோல், லிட்டருக்கு 80.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு, 72.14 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தபோதிலும், கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு 19 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.தேர்தல் முடிந்த பிறகு 14-ம் தேதி முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இன்றைய விலை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை இதுவரை இல்லாத விலையாக, லிட்டருக்கு 80 ரூபாயை கடந்தது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 80.11 ரூபாயாக விற்பனையாகிறது.
டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 72.14 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று, பெட்ரோலிய நிறுவனங்களின் இயக்குனர்களை சந்தித்து பேசுகிறார்.
அப்போது வரிகுறைப்பு மற்றும் டீலர் கமிஷன் குறைப்பு போன்ற நடவடிக்கை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT