Published : 02 May 2018 09:02 AM
Last Updated : 02 May 2018 09:02 AM
சீனாவுடன் போட்டியிட வேண்டுமென்றால் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். இதன்மூலம்தான் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கேற்ப நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகவில்லையெனில் மிகவும் பரந்துபட்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி மிகுந்த கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது இளையதலைமுறை இளைஞர்கள் யாருமே தரமற்ற வேலை வாய்ப்புகளை விரும்புவதில்லை. தரமான, இளைஞர்களின் திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டுமெனில் அதற்கு பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு இப்போது வடக்கு பிராந்தியத்திலிருந்துதான் சவால்கள் உருவாகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எத்தகைய பொருளாதார நிலையுடன் இருந்ததோ அதே நிலையில்தான் சீனாவும் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவுடைய பொருளாதாரத்தை விட 5 மடங்கு அதிக பொருளாதாரம் கொண்ட நாடாகத் திகழ்கிறது தெற்காசியாவில் மிகவும் வலுவான நாடாக அது முன்னேறியுள்ளது.
வங்கதேசத்துக்கு 4,000 கோடி டாலர், பாகிஸ்தானுக்கு 4,300 கோடி டாலர், இலங்கைக்கு 1,800 கோடி டாலர் தொகையை அந்நாடுகளில் துறைமுக மேம்பாட்டுக்கு சீனா வழங்கியுள்ளது.
நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. புறச் சூழலால் ஏற்படும் நெருக்குதல்களைச் சமாளிக்க நமக்கு பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். 2022-ம் ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்க அளவுக்கு உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT