Published : 17 Apr 2018 09:06 AM
Last Updated : 17 Apr 2018 09:06 AM
மே 10-ம் தேதிக்குள் ரூ.100 கோடியை உச்சநீதிமன்ற கருவூலத்தில் செலுத்தவேண்டும் என ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு (ஜேஏஎல்) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 25-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ரூ.125 கோடியை ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் செலுத்தியிருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஏப்ரல் 12 அன்று ரூ.100 கோடியை செலுத்தியதாகவும், நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டப்படி மாதத்துக்கு 500 வீடுகளை கட்டித்தர முடியுமென்றும் நிறுவன வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்திடமிருந்து வீடுகளை வாங்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க ரூ.200 கோடியை இரண்டு தவணைகளாக செலுத்துமாறு மார்ச் 21-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுவரை ரூ.550 கோடியை உச்ச நீதிமன்றத்தில் செலுத்தியதாக தெரிவித்துள்ள ஜெய்பிரகாஷ் நிறுவனம், வீடு வாங்க விரும்பிய 30,000 பேரில் 8 சதவீதம் பேர் மட்டுமே பணத்தைத் திருப்பிக் கேட்பதாகவும், மற்றவர்கள் வீடு வாங்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் திவாலாக்க நடவடிக்கைகளைத் தொடங்கவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் ஜேப்பீ இன்பிராடெக் நிறுவனத்துக்கு அளித்த ரூ.526 கோடி கடன் திரும்பாத நிலையில் ஜேபீ இன்பிராடெக் நிறுவனத்தின் திவாலாக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என என்சிஎல்டியில் ஐடிபிஐ வங்கி முறையிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT