Published : 06 May 2024 05:58 PM
Last Updated : 06 May 2024 05:58 PM

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் நிமித்தமாக கோயல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு மாத காலங்களும் அவர் பிணை விதிகளை முழுமையாக பின்பற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 8 வங்கிகளிடமிருந்து ரூ.5,716 கோடி கடன் பெற்று சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மடைமாற்றியுள்ளார் என்று குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடைய மனைவி கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு 2 மாதங்கள் ஜாமீன் வேண்டுமென கோயல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னணி இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது. அமலாக்கத் துறையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x