Last Updated : 24 Apr, 2024 04:08 AM

 

Published : 24 Apr 2024 04:08 AM
Last Updated : 24 Apr 2024 04:08 AM

”ஜவுளித் தொழிலில் நெருக்கடியை சமாளிக்க பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை தேவை”

பிரதிநிதித்துவப் படம்

கோவை: தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான ஜவுளித்தொழில் பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பருத்தி சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தியை முக்கிய மூலப் பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழில் தமிழகத்தில் பிரதானமாக உள்ளது. இந்தாண்டு மொத்தம் 320 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி சாகுபடி செய்யப்படும் சூழலில் தற்போது வரை 258 லட்சம் பேல் சந்தைக்கு வந்துள்ளது. பருத்தி விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் இருந்து தமிழக ஜவுளித் தொழில் மீளவில்லை என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் ( சிட்டி ) முன்னாள் தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கத்தின் ( சிஸ்பா ) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்தின், மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் ( ஆர்டிஎப் ) தலைவர் ஜெயபால் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தற்போது வரை 80 சதவீத பருத்தி சந்தைக்கு வந்துவிட்டது. இந்திய பருத்தி கழகம் ( சிசிஐ ) பருத்தியை நேரடியாக ஜவுளித் தொழில்துறையினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதங்களில் ஒரு கேண்டி ( 356 கிலோ ) பஞ்சு ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.58 ஆயிரமாக குறைந்துள்ளது. விஸ்கோஸ், பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் விலை சர்வதேச சந்தையை விட இந்தியாவில் ஒரு கிலோவிற்கு ரூ.18 முதல் ரூ.20 வரை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ள மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால நூல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளித்தொழில் துறையினர் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

தவிர, தமிழகத்தில் இருந்து ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக் கணக்கான வடமாநில தொழிலாளர்கள் திரும்பவில்லை. மக்களவைத் தேர்தல் நடப்பதால் அவர்கள் தமிழகம் திரும்ப வழக் கத்தை விட கூடுதல் காலதாமதம் ஆகும். கோவையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் நூற்பாலை வளாகங்களில் நூற்பு இயந்திரங்களில் இழைகள் அடிக்கடி அறுந்து விடுகின்றன. எனவே, தற்போதுள்ள நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள ஜவுளித் தொழில்துறையினர் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளனர்.

நெருக்கடிக்கு மத்தியிலும் இருக்கும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், வங்கிகளில் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தவும் பெயரளவிற்கு செயல்பட்டு வருகின்றன. உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த ஆண்டு ஜவுளித்தொழில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். ஒரு ஆண்டுக்கு பின் தான் முன்னேற்றம் அடையும்.

தீர்வு என்ன?: தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அளிக்கப்படும் அதிக மானிய திட்டங்களை போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். தமிழக ஜவுளித்தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத் தறியாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். உலகளவில் பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் கடந்த 2014-ல் 398 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. 10 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 2024-ல் 320 லட்சம் பேல்களாக குறைந்துள்ளது. பருத்தி சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது முயற்சியை தொடங்கினால் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 5 ஆண்டுகள் தேவைப்படும். நீண்ட கால தீர்வாக அமையும் என்பதால் பருத்தி சாகுபடியை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x