Published : 11 Mar 2024 05:38 AM
Last Updated : 11 Mar 2024 05:38 AM

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல்

கோப்புப்படம்

சென்னை: மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவருமான வரித் துறை தெரிவித்துள் ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலக கூடுதல் வருமான வரி ஆணையர் (தலைமையகம்) பி.எம். செந்தில் குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறை, அதிக வருமான வரி திரும்பக் கோரும் (ரீபண்ட்) கோரிக்கைகளை ஆய்வுசெய்யும்போது, சில வரி செலுத்துவோர் வழக்கத்துக்கு மாறாக வருமான வரிச் சட்டப் பிரிவு 8ஜி-ன்படி (நிதிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் போன்றவை), பிரிவு 80ஈ-ன் படி (கல்வி கடனுக்கான வட்டி) மற்றும் பிரிவு 80ஜிஜிசி பிரிவின்படி (அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள்) பெரும் வரி விலக்குகளை, தங்களது 2021-22, 2022-23 மற்றும் 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தில் கோரியுள்ளனர்.

வரிசெலுத்துவோர் சிலர், தங்களது மொத்த வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை வரி விலக்காக கோரியுள்ளனர்.

அத்தகைய வரி செலுத்துவோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, பலராலும் தங்களதுவருமான வரிப் படிவத்தில் அவர்கள் கோரிய வரிச் சலுகைகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை வழங்க முடியவில்லை.

எனவே இத்தகைய சூழலில், 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வருமான வரிச் சட்ட பிரிவு 139 (8ஏ)ன்கீழ் வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த பின்னரும், கூடுதல் வரியை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த பிரிவின்கீழ், வரி செலுத்துவோர், அந்த வருடத்துக்கு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானம் அல்லது பிழைகளை சரி செய்ய முடியும்.

வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதன் மூலம், அந்தப் பிழைகளை திருத்தம் செய்து கொள்ளலாம் என்பது அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரப்படுகிறது.

எனவே, மதிப்பீட்டு ஆண்டு 2021-22க்கான புதுப்பிக்கப்பட்ட வருமானவரிப் படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி (அதாவது, நிதி ஆண்டு 2020-21) இம்மாதம் 31-ம் தேதியாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x