Published : 07 Feb 2018 11:27 AM
Last Updated : 07 Feb 2018 11:27 AM
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது மூன்று புதிய கார்களை தரம் உயர்த்தி புதிய வடிவில், வாகனக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தொடர்ந்து விற்பனையை அதிகரித்து வருகிறது. புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்வதில், மாருதி, ஹூண்டாய் உட்பட பிற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் ஹோண்டா நிறுவனம், டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் தற்போது நடந்து வரும் 2018ம் ஆண்டுக்கான வாகன கண்காட்சியில் மூன்று புதிய வடிவிலான கார்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐந்தாவது தலைமுறை சிஆர் -வி, 10-வது தலைமுறை சிவிக் மற்றும் 2-வது தலைமுறை அமேஸ் ஆகிய இந்த கார்கள் பழைய வடிவில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள இந்த கார்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என ஹோண்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் தக்காஹிரோ ஹாச்சிகோ கூறியதாவது:
''கடந்த 2017-ம் ஆண்டு உலக அளவில் எங்கள் நிறுவனத்தின் 53 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் இந்தியாவில் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சந்தையை மனதில் கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆறு புதிய மாடல் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். சிஆர் - வி மற்றும் சிவிக் மாடல் கார்கள் 2018 -19ல் அறிமுகப்படுத்தப்படும்'' எனக் கூறினார்.
2017-ம் ஆண்டில் ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT