Published : 27 Dec 2023 09:44 PM
Last Updated : 27 Dec 2023 09:44 PM

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024 –ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து கட்டாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

அரவை கொப்பரையின் நியாயமான சராசரி தரத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், அரவைக்கு முந்தைய கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் 2024 பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதமும், அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு, 63.26 சதவீதமும் லாபம் கிடைக்கும். இது, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட, 1.5 மடங்கு அதிகமாகும். அரவைக் கொப்பரை எண்ணெயைப் பிரித்தெடுக்கவும், அரவைக்கு முந்தைய, சமையல் கொப்பரை உணவுக்கும் மத சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மில்லியன் கணக்கான கொப்பரை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

2024 பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அரவை கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு முந்தைய பருவத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250 அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், அரவை கொப்பரை மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2014-15 -ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,250 ஆகவும், ரூ.5,500 லிருந்து 2024-25-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், 2024-25-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வதோடு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் தேங்காய் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும். நடப்பு 2023-ம் ஆண்டில், ரூ.1,493 கோடி செலவில் 1.33 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை அரசு கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 90,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் கொள்முதல் முந்தைய பருவத்தை (2022) விட 227 சதவீதம் அதிகரித்துள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x