Published : 07 Jan 2018 10:29 AM
Last Updated : 07 Jan 2018 10:29 AM

ஏர் இந்தியா நிறுவன ஏலம்: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஆர்வம்

டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இருநிறுவனங்கள் இணைந்து ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஸ்தாரா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தால் 1930-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் 1953-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகிறது. நிறுவனத்தின் கடன் 850 கோடி டாலராக உள்ளது. இதையெடுத்து நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு ஏலம் விடுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதற்கிடையே விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய புதிய நிறுவனமே விஸ்தாரா. இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சிஇஓ லெஸ்லி தங் கூறுகையில், ``ஏர் இந்தியா ஏலத்தில் பங்கேற்பதற்கு ஆலோசித்து வருகிறோம். இரு நிறுவனங்களும் திறந்த மனதுடன் இதை அணுகுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனும் ஏர் இந்தியா ஏலத்தில் பங்கேற்பதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர மற்ற உள்நாட்டு நிறுவனங்களும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

`ஆண்டு இறுதியில் சர்வதேச போக்குவரத்து’

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தும் விஸ்தாரா நிறுவனத்தின் சர்வதேச போக்குவரத்து ஆண்டின் இரண்டாம் பாதியில் இருக்கும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லெஸ்லி தங் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: வரும் மே மாதம் நிறுவனத்தின் வசம் 22 விமானங்கள் இருக்கும். அதனால் சர்வதேச போக்குவரத்தினை தொடங்குவதற்கான அனுமதி கிடைத்துவிடும். தற்போதைய விதிமுறைகளின்படி 20 விமானங்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் சர்வதேச போக்குவரத்தினை தொடங்க முடியும். அதேபோல உள்நாட்டு போக்குவரத்தையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். பிப்ரவரி 15-ம் தேதி முதல் சென்னைக்கு போக்குவரத்தினை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இந்த நிறுவனத்தின் வசம் 17 ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. 22 நகரங்களில் வாரத்துக்கு 700 விமான சேவைகளை வழங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x