Published : 30 Nov 2023 04:50 AM
Last Updated : 30 Nov 2023 04:50 AM

ரூ.2,000-க்கு மேல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்

புதுடெல்லி: சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், கூகுள், ரேசர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேற்று மத்திய அரசு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, ரூ.2,000-க்கு மேல் முதன்முறையாக ஒரு கணக்குக்கு பரிவர்த்தனை செய்வதற்கு 4 மணி நேரம் அவகாசம் வழங்கினால், மோசடிகளைக் குறைக்க முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதன்படி, புதிதாக ஒரு கணக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால், 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். யுபிஐ உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த் தனைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு மோசடியான இணைய இணைப்புகளை அனுப்பி பணம்பறித்தல், வங்கி அதிகாரிகள் போல் பேசி மக்களிடமிருந்து வங்கி கடவுச் சொல்லை ஏமாற்றிப் பெறுதல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசுதீவிரமாக இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x