Last Updated : 16 Nov, 2023 04:18 PM

1  

Published : 16 Nov 2023 04:18 PM
Last Updated : 16 Nov 2023 04:18 PM

உடுமலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டைக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்!

உடுமலை: பனி காலத்தை நம்பி உடுமலையில் 5 ஆண்டுகளுக்குப்பிறகு கொண்டைக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் கொண்டைக்கடலை (பனிக்கடலை) சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து விவசாயிகள் மானாவாரியாக இதனை சாகுபடி செய்து வருகின்றனர். மழையின் ஈரத்தன்மையைக் கொண்டு நடவு செய்யப்பட்டு, அதன் பின் மார்கழி மாதத்தில் கிடைக்கும்பனியின் ஈரத்தைக் கொண்டு செடிகள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். பராமரிப்புச் செலவு குறைவு என்பதால் சிறு, குறு விவசாயிகள் ஆர்வமுடன் கொண்டைக்கடலை சாகுபடியில் ஈடுபடுவார்கள். பெரும்பாலும் நிலமற்ற குத்தகை விவசாயிகள்தான் அதிகளவில் ஈடுபடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கொண்டைக் கடலைக்குகட்டுப்படியான விலை கிடைக்காததும், மத்திய அரசுவெளிநாடுகளில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததும்உள்ளூர் விவசாயிகளை கடுமையாக பாதித்தது. மேலும்அறுவடை சமயத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட இழப்பு கொண்டைக்கடலை சாகுபடி விவசாயிகளை பெரிதும் பாதித்தது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக வெகு சிலரே கொண்டைக்கடலை சாகுபடியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருவதால், கடலைக்கு ஓரளவு கட்டுப்படியான விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள
கொண்டைக்கடலை.

இதுகுறித்து விவசாயி தங்கவடிவேல் கூறியதாவது: குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 110 நாட்களில் அறுவடை செய்வது வழக்கம். ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவாகும். விளைச்சல் 700 கிலோ முதல் 800 கிலோ வரை கிடைக்கும். விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளாவில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வது வழக்கம். 2013-14-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.12,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பின் மத்திய அரசு தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை ஊக்குவித்ததால், விலை படிப்படியாக குறைந்து குவிண்டால் ரூ.5000-க்கும் கீழ் குறைந்தது.

அதனால் பலரும் கொண்டைக்கடலை சாகுபடி செய்வதை கைவிட தொடங்கினர். நடப்பு பருவத்தில் முந்தைய பரப்பைவிட குறைவாகவே விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியுறவு கொள்கைகளையும் செயல்படுத்த வேண்டும். இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தி பாதிப்பும், அதனால் உள்ளூர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீடு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x