Last Updated : 07 Jan, 2018 10:33 AM

 

Published : 07 Jan 2018 10:33 AM
Last Updated : 07 Jan 2018 10:33 AM

2018-19-ம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வலுவாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத்தலைவர் கருத்து

அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வலுவாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வருவதால் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ராஜீவ் குமார் தெரிவித்தார்.

2017-18-ம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகித கணிப்பை மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) நேற்று முன்தினம் வெளியிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என சிஎஸ்ஓ கணித்திருந்தது. விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததன் காரணமாகவே ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது எனவும் கூறியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜீவ் குமார் மேலும் கூறியதாவது: 2017-18-ம் நிதியாண்டு இரண்டாவது அரையாண்டில் ஜிடிபி 7 சதவீதம் வளர்ச்சியடைய வாய்ப்பு இருப்பதாலேயே நிதியாண்டு வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அளவுக்கு வந்திருக்கிறது. அதனால் 2018-19-ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் மேலும் உயரும்.

கடந்த 3 காலாண்டுகளாக பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன. மேலும் உற்பத்தித் துறை பிஎம்ஐ கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்திருக்கிறது. மேலும் எப்எம்சிஜி துறையிலும் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரும் காலங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக இருக் கும்.

2016-17-ம் நிதியாண்டில் அதிகமாக இருந்த பொதுத்துறை செலவினங்கள் தற்போது குறை வாக இருந்தபோதிலும் நடப்பு நிதியாண்டு இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருப்பதன் அடிப்படையில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டிருக்கலாம் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார். நாட்டின் ஜிடிபி கடந்த 2016-17-ம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x