Published : 06 Jan 2018 10:09 AM
Last Updated : 06 Jan 2018 10:09 AM

2018-ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5%: மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம்2017-18-ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகி தம் 7.1 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டது. ஆனால் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் நேர்மறை மாற்றங்கள் தெரிந்தது. இரண்டாவது காலாண்டு முடிவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது.

அதேபோல ரிசர்வ் வங்கியும் தனது ஜிடிபி வளர்ச்சி விகித கணிப்பை மாற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைவது என்பது கடினமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

``நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சியை கடப்பது என்பது மிக கடினமானது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்று எஸ்பிஐ ரிசர்ச் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார். மேலும் 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான பேரியல் பொருளாதார புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் மீண்டுவருவதையே காட்டுகிறது. முக்கிய துறை நிறுவனங்கள் 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளன. ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறை நிறுவனங்கள் மீண்டுவருவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி 5 சத வீதமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x