Published : 02 Oct 2023 04:15 PM
Last Updated : 02 Oct 2023 04:15 PM

25-வது ஆண்டு... தமிழகத்தில் வெள்ளி விழா காணும் உழவர் சந்தை திட்டம்!

திருச்சி: தமிழகத்தில் உழவர் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 25-வது ஆண்டு விழா(வெள்ளி விழா) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர்கள் சாதனை மலர் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய திட்டமிட்ட அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, 1998-ம் ஆண்டு ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’-வை அமைத்தார். அக்குழு பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

அதன்படி, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 1999 நவம்பர் 14-ம் தேதி தமிழகத்தின் முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அப்போதைய திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் திருச்சி அண்ணாநகர், கே.கே.நகர், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துறையூர் என 8 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.

உழவர் சந்தை திட்டம் தொடங்கி 24 ஆண்டுகள் நிறைவுற்று வரும் நவம்பர் மாதம் 25-ம் ஆண்டான வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதை முன்னிட்டு அந்தந்த உழவர் சந்தைகளின் வளர்ச்சி குறித்து சாதனை மலர் வெளியிடப்பட உள்ளது. இதை தயாரிக்கும் பணியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர்கள் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் மும்முரமாக உள்ளனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் மகத்தான திட்டங்களில் உழவர் சந்தை திட்டம் முக்கியமானது. உழவர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பயனுள்ள இத்திட்டம் பல்வேறு காலங்களில் மேம்படுத்தப்பட்டு நவீன வளர்ச்சிகளை கண்டு வந்துள்ளது. ஒவ்வொரு உழவர் சந்தையும் தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலை வரையிலான செய்திகள், படங்கள் ஆகிய விவரங்களை சேகரித்து வருகிறோம்.

பல உழவர் சந்தைகள் ஆரம்பத்தில் சாதாரண அளவில் தொடங்கி தற்போது பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எடைக்கல் தராசுகள் மாற்றப்பட்டு டிஜிட்டல் தராசுகள் வைக்கப்பட்டுள்ளன. வெளி மார்க்கெட்-உழவர்சந்தை விலையை ஒப்பிடும் வகையில் மின்னணு விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் இல்லம் தேடி பண்ணை காய்கறி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை செய்வதற்காக வாகனம் வாங்க மானியத்துடன் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. 100 கிலோவுக்கு மேல் காய்கறி கழிவு சேரும் உழவர்சந்தைகளுக்கு உரம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி அண்ணாநகர், கே.கே.நகர், முசிறி ஆகிய உழவர்சந்தைகளில் உரம் தயாரிக்கும் இயந்திரம் உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விற்பனை மையம் அமைக்க கடைகள் வழங்கப்பட்டுள்ளன. உழவர்களின் விளைபொருட்களை பாதுகாக்க குறிப்பிட்ட சில உழவர் சந்தைகளில் குளிர்பதன கிடங்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இ-சந்தைகள் எனப்படும் ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி உழவர் சந்தை திட்டம் பல்வேறு வளர்ச்சிகளை எட்டி உள்ளது. அதைப்பற்றிய தொகுப்புகளை புத்தகமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவர் சந்தை திட்டம் நவம்பர் மாதம் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளதால், அப்போது சாதனை மலர் வெளியிடப்பட உள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x