Published : 28 Dec 2017 05:27 PM
Last Updated : 28 Dec 2017 05:27 PM
வங்கித்துறை சீர்த்திருத்தங்களுடன் பொதுத்துறை வங்கிகளின் ஆரோக்கியத்தை பேணி வளர்க்க முதலீடு செய்யும் திட்டத்தையும் மத்திய அரசு புத்தாண்டில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக்கடன் மற்றும் செயலிழந்த சொத்துக்களினால் வங்கிகளை மீட்கும் முக்கியப் பணிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் 25 ஆண்டுகாலமாக இல்லாத அளவுக்கு தாழ்வாகச் சென்ற கடன் வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டியுள்ளது.
அதிக வாராக்கடன்களினால் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூ ந் 2017 வரை செயலில் இல்லாத சொத்துக்களின் மதிப்பு இரண்டரை மடங்குக்கும் அதிகமாகி ரூ.7.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச்சில் இது ரூ.2.75 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.2.11 லட்சம் கோடி பேக்கேஜில் ரூ.1.35 லட்சம் கோடி பத்திர மறு மூலதனமாக்கம் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. இதன் விவரங்களை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.
வங்கிகளில் முதலீட்டை அதிகரிப்பது மட்டும் போதாது, அதற்கேற்றவாறான சீர்த்திருத்தங்களும் தேவைப்படுகிறது, அதாவது வங்கி வாரியங்களை வலுவாக்க வேண்டும். குறிப்பாக செயலில் இல்லாத சொத்துக்கள் (NPA) விவகாரத்தில் முதலில் தீர்வு ஏற்பட வேண்டும்.
இது தொடர்பாக நிதிச் சேவைகள் செயலாளர் ராஜிவ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “சீர்த்திருத்தத் திட்டங்கள் முக்கியமானது. முதலீட்டுடன் சீர்த்திருத்தங்களுக்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். உண்மையான கடன் வாங்குவோருக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு ஏகப்பட்ட சீர்த்திருத்தங்கள் வரவிருக்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் அதிக கவனக்குவிப்பு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்தத் துறையில்தான் வேலை வாய்ப்பு உருவாகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைப்பது பற்றி அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழு ஒன்று வங்கிகளிடமிருந்து பரிந்துரைகளைக் கோரி அந்தப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவுள்ளன. இதன் படி வங்கிகளின் முன்மொழிவுகள் மீதான அறிக்கை அமைச்சரவைக்கு அனுப்பப்படவுள்ளது.
வங்கிகளின் பெரிய சுமையான செயலில் இல்லாத சொத்துக்கள் மத்திய அரசு 2 அவசரச்சட்டங்களை இயற்றியுள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறை (திருத்த) சட்டம்., 2017, திவால் சட்டம், 2017 ஆகியவை இயற்றப்பட்டுள்ளது. திவால் சட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தினால் பரிசீலிக்கப்படவில்லை. திவால் சட்டங்களின் படி சில புரொமோட்டர்கள் தங்கள் சொத்துகளுக்கான மறுகோரலை வைக்க முடியாது.
ஆகஸ்ட் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டது, அப்போது டிசம்பர் 13-ம் தேதி வரையிலான் 28 பெரிய கணக்குகள் விவகாரத்தை தீர்க்கவோ அல்லது திவால் சட்ட நடைமுறைகளுக்குட்படுத்தவோ வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த 28 கணக்குகளின் வராக்கடன் தொகை ரூ.4 லட்சம் கோடி.
ஏசியன் கலர் கோட்டட் இஸ்பாட், கேஸ்டெக்ஸ் டெக்னாலஜீஸ், கோஸ்டல் புரொஜக்ட்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி, ஐ.வி.ஆர்.சி.எல், ஆர்ச்சிட் பார்மா, எஸ்.இ.எல் மேனுபாக்சரிங், உத்தம் கல்வா மெட்டலிக், உத்தம் கல்வா ஸ்டீல், விசா ஸ்டீல், எஸ்ஸார் புராஜெக்ட்ஸ், ஜெய்பாலாஜி இண்டஸ்ட்ரீஸ், மானட் பவர், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி, ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், விண்ட் வேர்ல்ட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் திவால் சட்ட நடைமுறைகளுக்குட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017-ல் இன்னொரு முக்கியமான அம்சம் ஸ்டேட் வங்கியுடன் இணைந்த 5 வங்கிகள், மற்றும் பாரதிய மகிலா வங்கி. இதனையடுத்து ஸ்டேட் வங்கி உலகின் டாப் 50 வங்கிகளுக்குள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT