Published : 15 Dec 2017 10:09 AM
Last Updated : 15 Dec 2017 10:09 AM

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ரூ.39,111 கோடி வருவாய் இழப்பு: மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு முதல் நான்கு மாதங்களில் மாநிலங்களுக்கு ரூ.39,111 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைப்பான `ஃபிக்கியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு முதல் நான்கு மாதங்களில் மாநிலங்களின் வருவாய் பாதுகாப்புக்கு ரூ.1.72 லட்சம் கோடி தேவைப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு ரூ.1.33 லட்சம் கோடிதான் இதுவரை சென்று சேர்ந்துள்ளது. மீதம் ரூ.39.111 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடப்பு நிதியாண்டு முழுவதும் மாநிலங்களுக்கு ரூ.55,000 கோடி இழப்பீடு ஏற்படும் என்று கணித்திருந்தது தற்போது தவறு என நிரூபணமாகியுள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டில் ஜிஎஸ்டியால் அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.90,000 கோடி இழப்பீடு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டியால் மத்திய அரசும் தற்போது வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது என்று தெரிவித்தார். இருப்பினும் ஜம்மு காஷ்மீர் நிதியமைச்சர் ஹாசீப் திராபு மற்றும் பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி ஆகிய இருவரும் அடுத்த சில மாதங்களில் ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் வருவாய் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பில் பல் வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் இன்னும் ஜிஎஸ்டி வரி அமைப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

``ஜிஎஸ்டி இன்வாய்சிங் நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அடுத்தடுத்த மாதங்களில் ஜிஎஸ்டி நடைமுறைகளில் என்னென்ன செய்யபோகிறோம் என்பது குறித்த திட்டங்களை வகுக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள், ரியல் எஸ்டேட், மின்சாரம் போன்றவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அதிகபட்ச வரி வரம்பான 28 சதவீதத்துக்குள் கொண்டு வரவேண்டும்.மேலும் ஜிஎஸ்டியுடன் கூடுதல் வரி விதிப்பதற்கு மாநிலங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலமே வருவாயை தக்கவைக்கமுடியும்’’ என்று சுஷில் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x