Published : 08 Dec 2017 03:11 PM
Last Updated : 08 Dec 2017 03:11 PM
சர்வதேச பொருளாதாரக் காரணங்களால் தங்கம் விலை இறங்குமுகமாக உள்ளது, எனினும் கிறிஸ்துமஸ் சீசன் தொடங்கும்போது, தங்கம் விலை உயருவதற்கு வாய்ப்புள்ளது என சென்னை தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. தங்கம் விலை சமீபத்தில், கிராம் ஒன்றுக்கு 2,835 ரூபாய் அளவிற்கு இருந்த நிலையில், அடுத்தடுத்து விலை குறைந்து, இன்று 2,730 ரூபாயாக விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் கவனம் அதன் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தங்கம் விலை குறைந்து வருவதற்கு காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:
‘‘சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலையும், தொழில் முடக்கமும் அதிகரித்துள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் பணத் தேவைக்காக அவர்கள் கையில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலை சில நாட்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. எனினும் விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசன் வரவுள்ளதால் தங்கம் விலை நிலவரத்தில் மாற்றம் ஏற்படும். பொதுவாகவே ஆண்டுதோறும், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசன் காலத்தில் தங்கம் விற்பனை சற்று அதிகமாகவே இருக்கும். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே தற்போது கிறிஸ்துமஸ் சீசன் வர இருப்பதால் ஒருவார காலத்திற்கு பின் தங்கம் விலை ஏறுவதற்கான சூழல் அதிகம் உள்ளது’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT