Published : 09 Jul 2014 11:16 AM
Last Updated : 09 Jul 2014 11:16 AM

அங்கக வேளாண்மையின் அவசியம்

கடந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை விவசாயத்துக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினர். அப்போது வேளாண்தொழில் ஒரு இலாபகரமான தொழிலாகத்தான் இருந்தது. பெருகிவரும் மக்கள் தொகையையும், குறுகிவரும் விளைநிலங்களையும் கருத்தில் கொண்டு, உணவுத் தேவையினைப்பூர்த்தி செய்ய இரசாயன இடுபொருட்களையும், உயர்விளைச்சல் தரும் ரகங்களையும் இப்போது பயன்படுத்துகிறோம். பசுமைப் புரட்சிசெய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு, ஏற்றுமதியையும் சிறப்பாக செய்துவருகிறோம்.

எனினும் தீவிர உற்பத்தி என்ற பெயரால் இரசாயனப் பொருட்களை பயன்படுத் தும்போது அதில் உள்ள பெரும்பாலான இரசாயனப் பொருட்கள் இயற்கையோடு இயல்பாக கலக்காதவையாக உள்ளன. இவை சுற்றுச் சூழலையும், உடல் நலத்தையும் பாதிப்பது நிச்சயம். இந்நிலையில் இதற்கு ஒரு மாற்று வழியாக மட்டுமின்றி, நோயற்ற மனித வாழ்விற்கும் பேருதவி செய்வதாக அங்கக வேளாண்மை (Organic Farming) திகழ்கிறது. இரசாயன வேளாண்மை யினால் நேரடியாகவும், பின் விளைவுகளாகவும் மண்வளம் குன்றி சராசரி மகசூல் குறையத் தொடங்குகிறது.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை உண்டாகிறது. நிலத்தடி நீரில் நைட்ரேட் என்ற நச்சு சேர்வதால், குடிநீராகப் பயன்படுத்தும்போது ரத்தத்தில் பிராணவாயுவின் அளவில் இடையூறு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

ஆக்சாலிக் அமிலம், பைடிக் அமிலம், டேனின் ஆகியவை காய்கறிகளில் அதிகரிப்பதால் நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற உப்புகளின் அளவு குறைகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு காற்று மண்டலத்தைப் பாதித்தல், மண் களர் மற்றும் அமிலத் தன்மையடைதல் என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாம் குடிக்கும் பாலில் தொடங்கி சுவாசிக்கும் மூச்சுக்காற்றுவரை எங்குமே நச்சுத்தன்மை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த சூழலில்தான் தற்போது இது தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வும், பெருகி வரும் இயற்கை வேளாண்மை விளை பொருட்களுக்கான சந்தையும் நமது பாரம்பரிய அங்கக வேளாண்மை மீண்டு்ம் உயிர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றை பிரகாசப்படுத்தியுள்ளன.

மண்வளத்தையும் நலத் தையும் பேணி, மனித மற்றும் கால்நடைவளத்தையும் காக்கும் வண்ணம் இயற்கை வளங்களைக் கொண்டு வேளாண்மை செய்வதே இயற்கை வழி வேளாண்மையாகும்.

தமிழ்நாட்டில் சாகுபடி நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகி தத்திற்கு மேல் பருவமழையை நம்பி சாகுபடி நடைபெறுகிறது. மானா வாரி நிலங்களில் ஒருபோக பயிராக கம்பு, சோளம், கொண்டைக்கடலை போன்ற பயிர்களுக்கு பெரும்பாலும் இரசாயன உரங்களோ, பூச்சி, பூஞ்சாணக் கொல்லி மருந்து களோ உபயோகப்படுத்தப் படுவதில்லை.

தங்களுக்கு கிடைக்கக்கூடிய குப்பை, கூளம், தொழு உரம், சாணம் ஆகிய வற்றை மட்டுமே விவசாயிகள் உரங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, நாம் அங்கக வேளாண்மைக்கு மீண்டும் திரும்புவது என்பது முடியாதது அல்ல. நமது நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அங்கக வேளாண் மையே அச்சாரமாக அமையும் எனலாம்.

தொடர்புக்கு: 94435 78172.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x