Published : 15 Dec 2017 10:11 AM
Last Updated : 15 Dec 2017 10:11 AM

வணிக நூலகம்: முடியும் என்ற மனம் வேண்டும்!

மது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான பார்வையும் விருப்பமும் நம் அனைவருக்குமே உண்டு. ஆனால், நம்மில் சிலரே அதனை அடையவும் அனுபவிக்கவும் செய்கிறார்கள். தாங்கள் விரும்பிய, தாங்கள் கனவு கண்ட தங்களுடைய வாழ்க்கையை சிலர் வாழ்கின்றனர். அதற்கு நேரெதிராக, ஏன் மற்றவர்கள் இவ்வாறான வாழ்க்கையிலிருந்து விலகிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைப்பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?

மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் இந்த வேறுபாட்டினை உருவாக்குவது எது?. இதற்காக நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? இவ்வாறான அடிப்படை கேள்விகளுக்கான பதிலை சொல்கிறது “டேனியல் சிடியாக்” அவர்களின் “ஹூ சேஸ் யு கான்ட்? யு டூ” என்னும் இந்தப் புத்தகம்.

கேள்விகளின் ஆற்றல்!

நமது எண்ணங்கள் மாறும்போது, நமது உணர்வுகள் மாற்றமடைகின்றது. நமது உணர்வுகள் மாறும்போது, நமது செயல்பாடுகள் மாற்றமடைகின்றது. நமது செயல்பாடுகள் மாறும்போது, நமது வாழ்வே மாற்றமடைகின்றது. சரியான கேள்விகள் என்பவை வளர்ச்சியை நோக்கிய மாற்றத்திற்கான அடிப்படை விஷயங்கள் என்கிறார் ஆசிரியர். என்னால் ஏன் அந்த செயலை செய்ய முடியவில்லை?, ஏன் எப்போதும் அனைத்தும் எனக்கு துரதிருஷ்டவசமாகவே நடக்கின்றது?, ஏன் என்னால் மற்றவர்களைப் போல வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை?, ஏன் நான் மட்டும் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கிறேன்? போன்ற கேள்விகளும் அதற்கான விடைகளுமே நமது மாபெரும் சாதனைகளுக்கான மூலதனங்கள்.

இவற்றையெல்லாம் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்று உள்ளது. நான் யார்? என்ற கேள்வியே அது. ஆம், நாம் யார் என்று தெரிந்து கொள்ளாமல் நம்மால் வேறு எதையும் சரிவர அறிந்து கொள்ள முடியாது. நான் அன்பானவனா?, நான் கண்ணியமானவனா?, நான் இரக்க குணமுள்ளவனா?, நான் பெருந்தன்மையானவனா?, நான் நேர்மையானவனா?, நான் நன்றியுள்ளவனா? போன்ற துணைக் கேள்விகளும் இதனுள்ளே அடங்கும். இவற்றிற்கு நம்மிடம் சரியான பதில் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், சரிப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது. நீங்கள் யார் என்பதை மட்டுமே மற்றவர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்களே தவிர, உங்களிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அல்ல.

நம்பிக்கைகள்!

வாழ்க்கையை நோக்கிய நமது ஒவ்வொரு தினசரி செயல்பாடும் நமது நம்பிக்கையின் வெளிப்பாடே. அது நன்மையானதாகவோ அல்லது நமது வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய நம்பிக்கைகளாகவோ இருக்கலாம். வெற்றியடைந்த மற்றவர்களைப் போல சிறப்பாக என்னால் மாற முடியாது, என்னால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியான மனப்பாங்கினை கொண்டவர்களே, வாழ்க்கை என்பது துன்பமானது, அனைவரும் மென்மையானவர்கள் அல்ல, தீவிர துரதிருஷ்டமே எனக்கு கிடைக்கிறது, யாரும் என்னை விரும்பவில்லை, குறிப்பிட்ட செயலை செய்வதற்கான காலநேரம் கடந்துவிட்டது, எனக்கு அதிக வயதாகிவிட்டது, நான் பயனற்றவன் ஆகியவையே இதற்கான உதாரணங்கள்.

இவ்வாறான நம்பிக்கைகளில் சிறிது சிறிதான மாற்றங்களை கொண்டுவந்து, அவற்றை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். ஆம், நம்பிக்கைகள் என்பவை வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் அனைத்திற்குமான முன்னோட்டங்கள் போன்றவை. இதற்கு, நமக்கு என்ன வேண்டும் அல்லது நாம் எதை செயல்படுத்தப் போகிறோம் என்பதில் மிகச்சரியான தெளிவு வேண்டும். அதன்பிறகு அந்த செயல்பாட்டில் நம்மை தடுக்கும் நம்முடைய மற்ற நம்பிக்கைகள் மீதான விழிப்புணர்வு வேண்டும். இதற்கான உதாரணங்களும் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக “எனக்கான வாழ்க்கை துணை ஒருவர் வேண்டும், ஆனால் அப்படி வாழ்க்கைதுணை கிடைக்கும்போது என்னுடைய சுதந்திரத்தை நான் இழந்துவிடுவேன்”. இதில் வாழ்க்கைதுணை வேண்டும் என்பது நமக்கான செயல்பாடு, சுதந்திரத்தை இழந்துவிடுவேன் என்பது அச்செயல்பாட்டை தடுக்கும் முரண்பட்ட நம்பிக்கை. இப்படியான முரண்பட்ட நம்பிக்கைகளை கையாளும்போது கவனிக்க வேண்டிய அம்சங்களாக சிலவற்றை கொடுத்துள்ளார் ஆசிரியர். இதில் எது முக்கியமானது? வாழ்க்கை துணையா அல்லது சுதந்திரமா என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும். எது நமது வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் தரத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதையும் மதிப்பீடு செய்து அதற்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகள்!

வெற்றிகரமான, வலிமையான ஒருவன் அவனது மாறுபட்ட சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறானே தவிர, ஒருபோதும் அவற்றால் பாதிக்கப்படுவது கிடையாது. எதிர்வரும் இன்னல்களை தனது ஆற்றல் மற்றும் அறிவுத்திறனால் நன்மையளிக்கும் விஷயங்களாக மாற்றியமைத்துக் கொள்பவனே சிறந்த வெற்றியாளன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நமது தொழில், பணி, குடும்பம், நண்பர்கள், உறவுகள், சமூகம் மற்றும் நமது நிதிநிலை என நம்மைச்சுற்றி உள்ள அனைத்து காரணிகளையும், மோசமான தருணங்களில் மிக எளிதாக குறை கூறிவிடுகிறோம் அல்லவா!. உண்மையில் அவற்றில் தேவையான மாற்றங்களை புகுத்தி, அவற்றை சரிவர பயன்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேற்றம் காணவேண்டும்.

சிக்கல்களும் துன்பங்களும் வாழ்க்கையின் உண்மைகள் மட்டுமின்றி தடுக்கமுடியாத விஷயங்களும் கூட. அவ்வாறான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே நம்மால் முடிந்த விஷயம். புரூஸ்லீ அவர்களின் கூற்றுப்படி, தண்ணீரை ஒரு டீ கப்பில் ஊற்றும்போதோ அல்லது ஒரு கிண்ணத்தில் ஊற்றும்போதோ அல்லது ஒரு பாட்டிலில் ஊற்றும்போதோ அந்த பொருளுக்கு ஏற்ப தண்ணீர் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு அதனுடன் ஒன்றிவிடுகிறது. அதுபோலவே நாமும் நம்மை எவ்வித சூழ்நிலைக்கும் தகுந்தற்போல வடிவமைத்துக்கொள்வது சிறந்தது.

கவனம் தேவை!

கேளுங்கள் கிடைக்கும், தேடுங்கள் கண்டறியப்படும், தட்டுங்கள் உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும் என்பது நாம் அறிந்ததே அல்லவா!. அதுபோலவே கவனம் செலுத்துங்கள் வெற்றி கிடைக்கும் என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய கூற்றே. எதன்மீது நாம் கவனம் செலுத்துகிறோமோ அதனை விரைவாக உணரத் தொடங்குகிறோம் என்கிறார் ஆசிரியர். ஒரு விஷயத்தை நாம் வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலையில், அது தொடர்பான மற்ற விஷயங்களும் நமக்கு அவ்வாறான உணர்வினையே ஏற்படுத்துகின்றன. நமக்கு வேண்டிய ஒரு விஷயத்தின் மீது நாம் கவனம் செலுத்தும்போது, நமது ஒட்டுமொத்த செயல்களும் அவ்விஷயத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. நமது நடத்தைகள், குரலின் தொனி, பேச்சு மற்றும் ஆழ்மன இயக்கங்கள் என அனைத்தும் அவ்விஷயத்தின் வெற்றிக்காக செயல்பட ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை.

நல்ல சகவாசம்!

நமது வெற்றியை பாதிக்கும் எவ்வித சகவாசத்தையும் நாம் ஊக்கப்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும். அதேசமயம் நமக்கு உந்துசக்தியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் விஷயங்களை தொடர்ந்து நம்முடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது நமது வெற்றியை எளிமைப்படுத்தி எளிதில் நம் வசப்படுத்தும். உதாரணமாக, நீங்கள் சைனீஸ் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் உங்களைச்சுற்றியும் ஸ்பானிஷ் பேசுபவர்களாக இருந்தால், உங்களால் எளிதில் சைனீஸ் கற்றுக்கொள்ள முடியுமா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

ஆர்வமுடன் அனுபவித்து செய்யப்படாத எந்த செயலும் சரியான வெற்றியைப் பெறாது. நமது கவனத்தை ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் செயல்பாட்டினை நோக்கி திருப்பும்போது, நமது ஆற்றலும் அதே திசையில் பயணித்து வெற்றியை கொடுக்கும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x