Published : 27 Jul 2023 04:26 PM
Last Updated : 27 Jul 2023 04:26 PM

பர்லியாறு அரசு பண்ணையில் துரியன் பழங்களுக்கு விறுவிறு முன்பதிவு

குன்னூர்: நீலகிரி மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டின் அருகே அமைந்துள்ளது பர்லியாறு அரசு பழப் பண்ணை. இங்கு பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான், இயற்கை காயகல்பமான துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், மாதுளை, கொய்யா, பலா, பப்ளிமாஸ், பன்னீர் கொய்யா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் 50,000 பேர் வரை பழப்பண்ணைக்கு வந்து செல்கின்றனர்.

விவசாயிகளுக்குத் தேவையான பாக்கு மர நாற்றுகளும், காபி, கோ-கோ மொட்டு கட்டிய செடிகளும், பல்வேறு பழ, வாசனை திரவிய, மலர் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷ்ண நிலை நிலவுவதால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக் கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப் பழம், ரம்பூட்டான் உட்பட பல அரிய வகை மருத்துவ குணமிக்க பழ வகைகள் விளைகின்றன.

துரியன், மங்குஸ்தான் பழமரங்கள் பர்லியாறு பழப்பண்ணையில் காணப்படுவது சிறப்பு. Duriozi Bethinus என்ற துரியன் பழம் மருத்துவ குணம் கொண்ட அரியவகை பழமாக கருதப்படுகிறது. துரியன் பழ மரங்களில், ஜனவரி - மார்ச் மாதங்களில் முதல் சீசன், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசன் களைகட்டும். சீசன் தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து மக்கள் வாங்கி செல்கின்றனர்.

மலேசியாவை தாயகமாகக் கொண்ட துரியன் பழங்கள், குறிப்பிட்ட மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளைகின்றன. பர்லியாறு பழப்பண்ணையில் உள்ள துரியன் மரங்கள் 200 அடிக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளன. முட்கள் நிரம்பிய உயரமான இந்த மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது அவ்வளவு எளிதல்ல.

இதனால், பழங்கள் பழுத்து தானாக கீழே விழும் வரை காத்திருந்து துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறிய வகை பலா பழங்களை போல முட்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால், நான்கு சுளைகளைக் கொண்ட பழங்கள் காணப்படும். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இதை உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என பரவலாக நம்பப்படுவதால், இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.

கடந்த காலங்களில் இங்கு விளையும் துரியன் பழங்கள், ஏலம் மூலமாக தனியாருக்குவிற்கப்பட்டன. ஆனால்,கடந்தாண்டு முதல் தோட்டக் கலைத்துறையே தங்களது விற்பனை நிலையம் மூலமாக துரியன் பழங்களை விற்கிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சீசன் தாமதமாகி வருகிறது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி கூறும்போது, "பர்லியாறுஅரசு தோட்டக்கலை பண்ணையில் 50துரியன் மரங்கள் உள்ளன. அதில் 33 மரங்களில் சிறியதாக துரியன் காய்த்துள்ளது. கல்லாறில் 3 மரங்களில் துரியன் காய்த்துள்ளது. கிலோ ரூ.520 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாது சத்துகள் அதிகம் உள்ளன. இந்த பழம் உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பலரும் வாங்கி செல்கின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x