Published : 29 Nov 2017 10:32 AM
Last Updated : 29 Nov 2017 10:32 AM

இணைய சமவாய்ப்பு நிலை தொடரும்: தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

இணைய சமவாய்ப்பு நிலைக்கு (நெட் நியூட்ராலிட்டி) இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணைய சமவாய்ப்பு தொடர டிராய் பரிந்துரை செய்கிறது என்று கூறியுள்ளது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக கருத்தறிதல் நிலையில் இருந்த இணைய சமவாய்ப்பு தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இணையத்தை பயன்படுத்துவதில் `பாரபட்சமான அணுகு முறையை கடைபிடிக்க ட்ராய் அனுமதி அளிக்காது. குறிப்பாக சமவாய்ப்பான டேட்டாவை பயன்படுத்துவதை தடுப்பது, அல்லது முன்னுரிமை அளிப்பது, மற்றும் விருப்பத்துக்கேற்ப வேகம் உள்ளிட்ட வகைகளில் நுகர்வோருக்கு பாரபட்சமான அணுகுமுறையைக் கடைபிடிக்க அனுமதிக்க முடியாது,’ என்று குறிப்பிட்டுள்ளது.

இது, அனைத்து வகையான பயன்பாட்டுக்கும் பொருந்தும். இணைய உள்ளடக்கம், செயலிகள், சேவைகள் மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும். நுகர்வோருக்கான தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கும் சமவாய்ப்பு நிலை தொடர வேண்டும்.

இணைய சமவாய்ப்பு நிலையை தொடர்வதில் சேவை வழங்கும் நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் உருவானது. 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இது தொடர்பாக கருத்தறியும் முன்வரைவை டிராய் வெளியிட்டது. இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளை கேட்டறியும் அறிக்கையை 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. குறிப்பாக இந்த அறிக்கையில் இந்தியாவில் இணைய சம வாய்ப்பு நிலைக்கான தேவைகள், வாய்ப்புகள் போன்றவற்றை வடிவமைப்பது குறித்து கேட்டிருந்தது. இந்த கருத்து கேட்பு அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ட்ராய் இணைய சமவாய்ப்புக்கான கொள்கை முடிவினை வெளியிட்டுள்ளது.

மேலும் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு டிராய் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. குறிப்பாக பாகுபாடான இணைய சேவை வழங்குவதற்கான ஒப்பந்தங்களை எந்த ஒரு பெயரிலும், யாரொருவர் பெயரிலும் மேற்கொள்ள தடை செய்வதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இணையத்தை பயன்படுத்தும் சமவாய்ப்பில் இயற்கையான முறையிலோ அல்லது செயற்கையான முறையிலோ பாரபட்சம் காட்டக்கூடாது. பயன்படுத்துபவரின் கருவிகள் அடிப்படையிலும் இந்த பாரபட்சம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் பேஸ்புக் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைய சேவை வழங்குவதில் முன்னுரிமை அடிப்படையில் சில திட்டங்களை முன்வைத்தன. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக்ள் எழுந்தன. இதனையடுத்து டேட்டா சேவை ஒழுங்கு முறையின் கீழ் நிறுவனங்கள் பாரபட்சமான சேவை வழங்குவதற்கு டிராய் தடை செய்திருந்தது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x