Published : 06 Jul 2023 06:14 PM
Last Updated : 06 Jul 2023 06:14 PM

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 339 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை புதிய சாதனை உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 339 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயர்வடைந்து 65,785 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்ந்து 19,497 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சற்றே சரிவுடன் தொடங்கிய போதிலும் பின்னர் ஏற்றம் கண்டது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 132.37 புள்ளிகள் உயர்வடைந்து 65,578.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 19,425.60 ஆக இருந்தது.

உலகளாவிய அளவில் பாதகமான சூழல்நிலவிய போதிலும், நிலையான வெளிநாட்டு வருவாய், ஹெவிவெயிட் பங்குகளின் வாங்குதல் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. இன்ட்ரா வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 386 புள்ளிகள் உயர்வடைந்து 65,832 வரை ஏற்றம் பெற்றது. நிஃப்டி 113 புள்ளிகள் உயர்ந்து 19,512 வரை ஏற்றம் கண்டது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 339.60 புள்ளிகள் உயர்வடைந்து 65,785.64 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98.80 புள்ளிகள் உயர்ந்து 19,497.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், பவர்கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x