Last Updated : 10 Oct, 2017 08:27 PM

 

Published : 10 Oct 2017 08:27 PM
Last Updated : 10 Oct 2017 08:27 PM

கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் குறைத்த ஐஎம்எப்: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி-யைக் காரணம் காட்டியது

2017-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.7% ஆகக் குறைத்தது பன்னாட்டு நிதியமைப்பான ஐ.எம்.எஃப். கடந்த ஏப்ரல், ஜூலை ஆகியவற்றுக்கான கணிப்பிலிருந்து 0.5% குறைத்தது பன்னாட்டு நிதியம்.

இந்தக் குறைப்புக்குக் காரணமாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்க விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது பன்னாட்டு நிதியம்.

தனது தற்போதைய உலகப் பொருளாதார அறிக்கையை வெளியிட்ட ஐஎம்எஃப்., 2018-ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியையும் 7.4% எனக் குறைத்துள்ளது. இதுவும் அதன் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 0.3% குறைவாகும்.

“இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது, காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடரும் விளைவுகள், மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பான நிச்சயமின்மைகளே. 2016-ல் அரசு செலவினம் வலுவாக இருந்ததையடுத்து மேல்நோக்கி பொருளாதார வளர்ச்சியைக் கணித்த போது 7.1% என்று கணிக்கப்பட்டது” என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய அறிக்கையில் 2017-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விட சீனாவை முன்னிறுத்துகிறது ஐஎம்எஃப்.

ஆனால் 2018-ல் இந்தியா மீண்டும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை எட்டும் என்றும் ஐஎம்எஃப்., தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் தொழிலாளர் சந்தை கட்டுப்பாடுகள் மற்றும் நிலம் கையகப்படுத்தல் நடைமுறைகள் எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதில் விரைந்து செயல்பட்டால் வர்த்தகச் சூழல் முன்னேற்றமடையும்” என்று பன்னாட்டு நிதியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 8.2% ஆகவும், 2017-ம் ஆண்டில் 6.7% ஆகவும், 2018-ல் 7.4% ஆகவும் ஐஎம்எஃப். கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x