திருப்பூர் உழவர் சந்தைகளில் 2 ஆண்டில் ரூ.310 கோடி மதிப்பிலான காய்கறி, பழங்கள் விற்பனை

ஆட்சியர் கிறிஸ்து ராஜ் | கோப்புப் படம்
ஆட்சியர் கிறிஸ்து ராஜ் | கோப்புப் படம்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 6 உழவர் சந்தைகளில் ரூ.310 கோடி மதிப்பிலான காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள் வரை 145 முதல் 163 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலம் நாள்தோறும் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் வரை பயன்பெறுகின்றனர். விளை பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக திருப்பூர் மாவட்டத்தில் 6 உழவர் சந்தைகளில் மொத்தம் 2,854 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதில் 485 விவசாயிகளின் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக அலுவலர்களின் ஆய்வுக்கு பின்னர் புதிய உழவர் சந்தை அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குநர்களை கோவை 9894715157, ஈரோடு 9789723614 என்ற எண்களிலும், உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் திருப்பூர் வடக்கு 9976709422, திருப்பூர் தெற்கு 9095059541, பல்லடம் 9976709422, உடுமலை 9443457987, தாராபுரம் 8220489391, காங்கயம் 8220489391 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலம் ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 மெட்ரிக் டன் அளவு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயனடைந்துள்ளனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in