Published : 31 Oct 2017 10:44 AM
Last Updated : 31 Oct 2017 10:44 AM

ஐடிஎப்சி - ஸ்ரீராம் நிறுவனங்கள் இணைப்பு கைவிடப்பட்டது

ஐடிஎப்சி - ஸ்ரீராம் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐடிஎப்சி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பங்குகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக முடிவு எட்டப்படாததால் இணைப்பு கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது.

கட்டமைப்புத் துறையைச் சேர்ந்த ஐடிஎப்சி நிறுவனம், 2015-ம் ஆண்டில் இருந்து வங்கித் துறையிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பிரமல் குழுமத்தின் நிதிச் சேவை நிறுவனத்துடன் ஸ்ரீராம் நிறுவனத்தை இணைக்க இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய சில்லரை வர்த்தக வங்கியாக உருவாகவும் திட்டமிட்டது.

இது தொடர்பாக ஐடிஎப்சி நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஸ்ரீராம் நிறுவனத்தை இணைக்க மிகச் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் ஐடிஎப்சி குழுமம் மற்றும் ஸ்ரீராம் குழுமத்துக்கிடையில் நடுநிலையான முடிவு எட்டப்படவில்லை. பங்குகளை இணைப்பதற்கான பரிமாற்ற விகிதத்தில் இரண்டு நிறுவனங்களிடையேயும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இணைப்பை கைவிடும் யோசனையை இரண்டு நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இரண்டு நிறுவனங்களும் 90 நாட்கள் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தன.

ஏற்கெனவே மேற்கொண்ட திட்டப்படி ஸ்ரீராம் நிறுவனத்தின் அனைத்து தொழில்களும் ஐடிஎப்சி வங்கி அல்லது ஐடிஎப்சி நிறுவனத்தோடு இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சந்தை நிபுணர்கள் இந்த இணைப்பு நடவடிக்கை எளிதாக முடிய சாத்தியமில்லை என்பதற்கு, ஏற்கெனவே பல சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக வங்கித் துறையில் இறங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில், நிறுவனர்கள் வசம் 10 சதவீதத்துக்கும் குறைவான பங்குகள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஸ்ரீராம் நிறுவனத்தில் பிரமல் எண்டர்பிரைசஸ் 20 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதனால் இணைப்பு எளிதாக இருக்காது என குறிப்பிட்டிருந்தனர்.

பிரமல் குழுமம் ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வர்த்தகத்தில் ஐடிஎப்சி நிறுவனத்தின் பங்கு 2.26 சதவீதம் வரை சரிந்து ரூ. 61.70க்கு முடிந்தது. பிரமல் எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.08 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.2,760-க்கு விற்பனையானது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x